சனி, 26 ஜூன், 2010

'தேவன்':கண்ணன் கட்டுரை-3

நீங்க கதை எழுதப் போறெளா..?

தேவன்

(ஒரு எழுத்தாளரின் சின்னப் பிள்ளை எழுதிப் பார்க்கிறான்)

(9.1.55)

நாமும் எழுத்தாளனாகணும்கிற ஆசை அநேகம் பேருக்கு இருக்கு. எங்கப்பாவோடே சிநேகிதாள், மச்சினன்கள், மருமான்கள், ஒண்ணு விட்ட தம்பிகள் எல்லாரும், ''ஒரு சான்ஸ் கொடுங்கோ! கொளுத்திக் காட்டுறோம். ஊதிக் காட்டுறோம்''னு அடிக்கடி கேக்கறா. (பத்திரிகை வேலைன்னா சிகரெட்டா... கொளுத்தறதுக்கும் ஊதறதுக்கும்!) அப்பா என்னைக் கூப்பிட்டு, ''எலே! உங்கம்மா தினம் தவறாமே வெண்டைக்காய் கறி பண்றதனாலே எனக்குப் பயித்தியம் பிடிக்காதுடா! இந்தப் பசங்கள் பிடுங்கலிலேயே மூளை கலங்கிடும்டா!'' அப்படீன்னு சொல்லி ரொம்ப வருத்தப்பட்டுண்டார்.

எதுக்குச் சொல்ல வந்தேன்னா... எதை எழுதினாலும் ஜனங்க வாசிப்பானு தப்பா நினைக்கிறா. வர கடிதாசுகளிலே கடோசி வரியைத்தான் எங்கப்பா படிப்பார். ஒடனே, ''எங்கிட்டே பணம் இருக்குன்னு தவறா நினைச்சுண்டிருக்கா இவா''ன்னு கீழே போட்டுடுவார். ஆபீஸ் டயத்திலே இருபத்தொண்ணாம் நம்பர் பஸ்ஸிலே கூட ஏறிப்பிடலாம்; அதைவிடக் கஷ்டம் பத்திரிகையிலே எழுத எடம் கிடைக்கிற காரியம்.

எழுதற விஷயம் ஜனங்களுக்குப் பிடிச்சிருக்கோ இல்லையோ, ஒதவி ஆசிரியருக்குப் பிடிச்சிருக் கணும். காலத்துக்கு ஏத்த மாதிரி எழுதினாக் கூடப் பிரயோசனம் இல்லை. இப்போ நான் நம்ம 'தண்டு' கதையைச் சொன்னால் எல்லாம் புரிஞ்சுடும்.

அவருக்குத் தபால்காரா மேலே ரொம்ப எரிச்சல். பின்னே, ஓயாம அவர் கதைகளைத் திருப்பிக் கொண்டு வந்தால்? கடோசியா அவர் ஒரு மிக மிக நல்ல கதை எழுதி, நேரே ஒதவி ஆசிரியரை பேட்டி கண்டு, ''இப்போ இதை வாசிக்கிறீரா? இங்கேயே தற்கொலை பண்ணிக்கட்டுமா?'' அப்படின்னார். அந்த ஒதவி ஆசிரியர் புன்னகை செய்து, ''வாசிக்கிறேன். எதற்கும் நீர் போய் நம்ம 'கான்ட்டீன்'லே டிபன் பண்ணிவிட்டு வாரும், பார்க்கலாம்!''னார்.

'தண்டு' திரும்பி வந்தபோது, ஒதவி ஆசிரியர் உலாத்திண்டிருந்தார். கதையை அவசரமா கூடையிலேருந்து எடுத்து, ''பேஷா இருக்கிறது கதை!'' அப்படீன்னார். 'தண்டு' வயிறெல்லாம் 'கபகப'ன் னுண்டிருந்த 'வெஜிடபிள் குருமா' கூட 'ஜில்'லுனு போச்சு. 32 பல்லையும் காட்டி, ''அப்படியா! அது எப்போ பிரசுரமாகும்?''னு கேட்டார்.


''அதுவா! ஜனங்கள் இன்னும் இதைப் படிக்கத் தயாராகல்லை. 20 வருஷம் கழிச்சுப் போட்டால் நன்னாயிருக்கும்''னார் அந்த ஒதவி ஆசிரியர்.

'தண்டு'வோட மனசு பூஷணிக்காய் மாதிரி உடைஞ்சு போச்சு. அந்த ஏக்கத்தோடேயே திரும்பி வரபோது, மூணாம் நம்பர் பஸ்ஸிலே கதையையும் காணடிச்சுட்டு, எழுதறதையும் நிறுத்தி விட்டார்; கிராமத்திலே போய் பயிர்ச் செலவு பண்ணிண்டிருந்தார்.

இருபது வருஷத்துக்கு அப்றம்தான் 'தண்டு' பட்டணத்துக்கு வந்தார். முப்பத்தி மூணாம் நம்பர் பஸ்லே எடமும் கெடைச்சுது. பழைய நினைவெல்லாம், பொங்கல் இனாம் கேழ்க்க வரவங்க மாதிரி 'க்யூ' வரிசைலே கூச்சல் போட்டுது. குனிஞ்சு பார்த்தால், ஸீட் அடியிலே ஒரு காகிதக் கட்டு சிக்கிக் கிடந்தது. எடுத்துப் பிரிச்சுப் படிச்சால், அவர் முன்......னே எழுதின கதை! 20 வருஷமா நம்ம சர்க்கார், பஸ்களை அப்படியே நலுங்காமே வச்சிருந்து நம்பரை மட்டும் மாத்தி ஓட்டறா!

'ஆஹா'ன்னார் நம்ம 'தண்டு'. கதையோடே ஓடினார். ஒதவி ஆசிரியர் அதே அறையிலே அதே மாதிரி உலாத்திண்டிருந்தார். முன் போலவே கதையைப் படிச்சுட்டு, ''பேஷாயிருக்கிறது கதை!'' அப்படீன்னார். 'தண்டு' தன்னோட 14 பல்லையும் காட்டி, ''அப்படியா? சந்தோஷம்! எப்போ இது பிரசுரமாகும்?''னு கேட்டார்.

ஒதவி ஆசிரியர் வழுக்கையைத் தடவிண்டே, ''பிரசுரம் செய்ய றதா? இந்தக் காலத்து ஜனங்க இதையெல்லாம் வாசிக்கமாட்டா ஓய்! இருபது வருஷம் முந்தி கொணர்ந்திருந்தீர்னா போட்டிருப்பேன்!'' அப்படீன்னார்.

''உமக்கென்ன வயசு?'' னு கேட்டார் 'தண்டு' வெடுக்குனு.

''ஏன்..? அறுபதாகிறது!''

'தண்டு' ஒரு நாற்காலியை அலாக்காய்த் தூக்கி, ''ஏனா? அறுபது வருஷத்துக்கு முந்தி நீர் பொறந்திருக்கவே கூடாது!''ன்னு சொல்றப்போ, நல்லவேளையா ஆபீஸ் பையன் ஓடி வந்து நாற்காலியைக் காப்பாத்தினான்.

எதுக்குச் சொல்ல வந்தேன்னா, எழுத்தாளனைக் கோபமூட்டப் படாது; எக்கச்சக்கமா ஆயிடும்! என்னைக் கேட்டா, பசிக்கிறபோது சாப்பிட்டுடணும்; தூக்கம் வர போது தூங்கிடணும்; எழுத வர போது எழுதிடணும். ஒலகம் முன்னேற, அது ஒண்ணுதான் வழி!

தெரியாமலா பெரியவா சொன்னா, வேலை செய்றவனுக்கு வேலையைக் கொடு; வேலை செய்யாதவனுக்குச் சம்பளத்தைக் கொடு அப்படின்னு?

[நன்றி: ஆனந்த விகடன் ]

தொடர்புள்ள சில பதிவுகள்:

கண்ணன் கட்டுரை - 1

கண்ணன் கட்டுரை - 2

கண்ணன் கட்டுரை - 4

தேவன் நினைவுகள்

மிஸ்டர் ராஜாமணி : கதைகள்

தேவன்’: துப்பறியும் சாம்பு

தேவன் படைப்புகள்

வியாழன், 24 ஜூன், 2010

'தேவன்':கண்ணன் கட்டுரை-2

மக்காவது... சுக்காவது..!
தேவன்

(ஒரு எழுத்தாளரின் சின்னப் பிள்ளை எழுதிப் பார்க்கிறான்)

(24.2.52)




'இந்தக் காலத்திலே நல்ல வேலையைக் காண்றதுன்னா சிவராத்திரியன்னிக்குச் சந்திரனைத் தேடறாப்லே'ன்னு பாட்டி சொன்னா. அப்பாவைக் கேட்டா, கடையிலே காப்பிக் கொட்டை வாங்கற மாதிரின்னு சொல்றார். முன் காலத்திலே, உத்தியோகம் வேணும்னா பெரிய மனுஷா சிபார்சு இருந்தாப் போறுமாம்; இந்தக் காலத்திலே அதுக்குப் பெரிய மனுஷாளாவே இருக்க வேண்டியிருக்காம்..!

எத்தனையோ பேர் வேலையில்லாத் திண்டாட்டம் போகணும்னு ஒரே வேலையாச் சொல்லிண்டிருக்கா. வேலை கெடைக்கிற முந்தி, எதுவானாலும் போறும்கறா; அது கெடைச்ச பேரோ, அது நன்னா இல்லையேனு மொனகிண்டிருக்கா!

இப்படித்தான் ஒருத்தன் எதானும் ஒரு வேலை கேட்டுண்டு வந்தானாம். மானேஜர் எரக்கப்பட்டு ஆபீஸ் பையனா வெச்சுண்டாராம். அப்புறம் அவன் ஆபீஸ் ரகஸ்யம் எல்லாம் தெரிஞ்சுண்டு மேலே மேலே வந்து மானேஜர் எடத்தையே புடிச்சுண்டானாம். ''நான் ஒரு முட்டாள்''னு மானேஜர் தலேல அடிச்சுண்டாராம். ஒடனே அவன், ''முட்டாள்களுக்கு இந்த ஆபீஸ்லே எடம் இல்லே''னு விரட்டிட்டானாம்.




அப்பாகிட்ட ஒருத்தர் வேலைக்கு, ஒரு பெரிய மனுஷர்கிட்டே சிபார்சுக் கடுதாசி வாங்கிண்டு வந்தார். அப்பாவாலே வேலை பண்ணி வைக்க முடியல்லே. ஆனா, அந்த மனுஷர் கொஞ்ச நாளிலே ரொம்ப சிநேகிதராப் போயிட்டார். ஒரு நாளைக்கு அவர் திடீர்னு வந்து, ''ஒங்களாலே ஒரு ஒபகாரம் ஆகணும்! நீங்க சொன்னா நடந்துடும்''னார்.

''சொல்லுங்கோ!''ன்னார் அப்பா.

''அந்தப் பெரிய மனுஷரே ஒரு ஆபீஸ் தொடங்கியிருக்கார். நிறையப் பேருக்கு அதிலே வேலை கொடுக்கிறார். உங்க கையாலே ஒரு சிபார்சு லெட்டர் கொடுத்தா, எனக்கும் ஒண்ணு கட்டாயம் கொடுத்துடுவார்...''

அப்பா பிரமிச்சுப் போயிட்டார். ''நீங்களே எனக்கு அவர்கிட்டத்தானே லெட்டர் வாங்கிண்டு வந்தேள்?'' அப்படீன்னார்.

''ஆமா! இப்போ அவரை விட நீங்க தெரிஞ்சவரா போயிட்டேளே!''

அப்பாவுக்கு ரெண்டு பயம்; அந்தப் பெரிய மனுஷரை நன்னாத் தெரியாதே என்கிறது ஒண்ணு; தன் லெட்டரை மதிக்கிற அளவு தான் பெரிய மனுஷர் இல்லையே என்கிறது ரெண்டு. நம்ம சிபார்சுக்கு மதிப்பு வரணும்னா எப்படி இருக்கணும்னு ஒரு கதை கூடச் சொன்னார் அப்பா...
ஒரு பெரிய ஆபீஸ்லே ஒரு வேலை காலியாச்சாம். இந்தச் சமாசாரம் செவிடாள் உள்பட எல்லார் காதிலேயும் விழுந்துட்டுதாம். ஒடனே அந்த ஆபீஸை நோக்கி, கிரிக்கெட் மாச்சுக்குப் போறாப்லே பட்டதாரிகள் போனாங்களாம்.

மானேஜர் வெளிலே வந்து, பழக் கடையிலே ஆரஞ்சுப் பழம் பொறுக்கறாப்லே மூணு பேரை நிறுத்தி வெச்சுண்டு, பாக்கிப் பேரை ''போங்கடா வேலையத்தவங்களா!''னு வெரட்டிட்டாராம்.


அந்த மூணு பேர்லே முதல் ஆளைப் பார்த்து, ஒரு தியேட்டர் பேரைச் சொல்லி, ''ஓய்..! நீர் போய் நமக்கு அந்தத் தியேட்டரிலே இன்னிக்கு ஒரு டிக்கெட் கொண்டு வாரும்! உம்ம சாமர்த்தியத்தைப் பார்க்கிறேன்''னார். அவன் அசந்து போனான். அன்னிக்குதான் அதிலே ஒரு புதுப்படம் ஆரம்பமாம்!

இரண்டாவது ஆளைப் பார்த்து ''நீர் ட்ராம்லே பாரீஸ் கார்னருக்குப் போய் பஸ்ஸிலே திரும்பி வந்துடணும். பார்க்கலாம்!''னார். அவன் தலையைப் புடிச்சுண்டான்; அது அப்படிச் சுத்தித்து.

மூணாவது ஆள் கையிலே ஒரு மூணு ஸ்தானக் கூட்டல் கணக்கைக் கொடுத்து, ''இதைப் போட்டு வையும், பார்க்கலாம்''னார்.

சரியா ஆறு மணி அடிச்சது. மானேஜர் கார்யதரிசியைக் கூப்பிட்டு, ''அந்தப் பசங்கள் வந்தாங்களா?"ன்னு கேட்டார்.

''ஓ! மொதல் பேர்வழி எப்படியோ டிக்கெட் கொண்டு வந்துட்டான்; ரெண்டாவது ஆள் ட்ராம்லே போய் பஸ்ஸிலே வந்துட்டான். ரொம்ப சாமர்த்தியசாலிகள் ஸார், ரெண்டு பேரும்!''

''உம்ம்.. அப்றம்..?''

''மூணாவது ஆள் கணக்கைப் பத்துத் தரம் போட்டிருக்கான். பத்து விடை வந்தது. அத்தனையும் தப்பு!''

''உம்... சரி! மூணாவது ஆளை வேலைக்கு வெச்சுண்டு, பாக்கி ரெண்டு பேரையும் வெளியிலே வெரட்டு! நமக்கு வாண்டாம்!''

''ஸார், ஸார்..! அந்த ஆள் ரொம்ப மக்காச்சே!''

''மக்கானால் என்ன ஓய்..! அவன் நம்ம ஊர் கலெக்டர் மருமான் ஆச்சே, அது போறாதா?'' அப்டீன்னாரே, பார்க்கலாம் அந்த மானேஜர்!

நீங்க கதை எழுதப் போறெளா..?

[நன்றி: ஆனந்த விகடன்]

தொடர்புள்ள சில பதிவுகள்:

கண்ணன் கட்டுரை -1

கண்ணன் கட்டுரை -3

கண்ணன் கட்டுரை - 4

தேவன்: படைப்புகள்

தேவன் நினைவுகள்

மிஸ்டர் ராஜாமணி : கதைகள்

தேவன்’: துப்பறியும் சாம்பு

திங்கள், 21 ஜூன், 2010

'தேவன்’:கண்ணன் கட்டுரை -1

அவனவன் வேலையை...
தேவன்


ஒரு சின்னப் பையன் எழுதுவது போன்ற நடையில் பல அரிய விஷயங்களை 'சின்னக் கண்ணன்' என்ற புனைபெயரில் விகடனில் தேவன் எழுதி வந்தார். 'கண்ணன் கட்டுரை' என்ற தலைப்பில் வெளியான அவை 50-களில் பலரைக் கவர்ந்தன. நூல் வடிவில் வெளியாகாத ‘தேவனின்’ கட்டுரைத் தொடர்களில் இது ஒரு மிகச் சிறந்த ஒன்று என்று நான் நினைக்கிறேன். கோபுலு அவர்களும் இதற்கு விசேஷமாகப் படங்கள் வரைந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
======

(ஒரு எழுத்தாளரின் சின்னப் பிள்ளை எழுதிப் பார்க்கிறான்)
(17.2.52)
எங்க பள்ளிக்கூடத்து வாத்தியார் பெரம்பை ஆட்டி, ''அவனவன் வேலையை அவனவன் செய்யுங்களேண்டா! உருப்படறதுக்கு வழி பிறக்கும்''னு அடிக்கடி கூச்சல் போடறார். நாலு பேர் கவனிக்கணும்னா இவர் யோசனை பலிக்காது! பள்ளிக்கூடத்துப் பசங்களானாலும் சரி, பார்லிமென்ட்லே ஒக்கார்ர மந்திரியானாலும் சரி... பேர் எடுக்கணும்னா பிறத்தியான் கார்யத்தைச் செய்யணும். அப்பத்தான் பத்ரிகேலே அவா பேர் பெரிசா வரும்.

இல்லாட்டா, கொல்ருல் வெச்சுண்டு மந்திரிகள் எதுக்காக அஸ்திவாரக் கல் நடறா? கொத்து மேஸ்திரியைவிட மந்திரி நன்னாக் கட்டி விடுவாரோ? பெரிய இஞ்சினீர், நாடகத்திலே நடிச்சுட்டு எத்தனை புகழ் வாங்கி விடறார்! அப்புறம், ஒரு நெஜ வக்கீல் சங்கீதக் கச்சேரி பண்ணிட்டு எல்லார்கிட்டேயும் ஸர்ட்டிபிகேட் வாங்கிடறார். பசங்க மாத்திரம் அவனவன் பாடத்தைப் படிச்சுண்டு இருந்துட்டால் யார் கவனிக்கப் போறா? பக்கத்துப் பையன்கள்கிட்டே பேசினாலும் வாத்தியார் கவனிச்சு, முதுகிலே ரெண்டு அறையாவது வைப்பார்!

எதுக்குச் சொல்ல வந்தேன்னா, ஒலகம் அப்படி ஆயிடுத்து. நாய் மனுஷனைக் கடிச்சா, அதைக் கேட்கிறவா இல்லை; மனுஷன் நாயைக் கடிச்சுட்டா, விழுந்து விழுந்து பார்க்கறா. பத்திரிகையிலே எழுதிப்பிடறா. ஆகையினாலே, பட்டணத்திலே அவனவன் வேலையைச் செய்றவனைக் காண்றது, பலசரக்குக் கடையிலே காப்பிக் கொட்டையைக் காண்ற மாதிரி அரிதா ஆயிப் போச்சு! கேளுங்கோ இந்தக் கதையை!

முந்தா நாள் தேனாம்பேட்டை யிலே யாரோ ஒருத்தர் வீட்டுக் கொழாயிலே ஜலம் வரதா ஒருத்தன் சொன்னான்னு ஜனங்கள் திரள் திரளா அதை வேடிக்கை பார்க்கப் போனா. 'பொழலேரியிலேயே தண்ணியில்லாத போது, கொழாயிலே வருமா?'னு எங்கப்பா மாத்திரம் போகல்லே. நானும் மாமாவும் மாத்திரம் போனோம்.

அந்தத் தேனாம்பேட்டை வீட்டுக்காரர் எங்களையெல்லாம் பார்த்து, ''யாரோ வெஷமக்காரன் பொய் வதந்தி கிளப்பியிருக்கான். ஐயோ பாவம்! இவ்வளவு தூரம் நடந்து வந்தேளே!''ன்னு வருத்தப் பட்டு, கண்ணாலே ஜலம் விட்டார். அப்றம் அவரை விசாரிச்சதிலே, அவரோட ஆறு பிள்ளைகளும் பத்திரிகைக்கு எழுதி பிரபலமான பேர்னு பெருமையாச் சொல்லி, அதை விவரமாவும் மாமாவிடம் சொன்னார்.

''மூத்தவன் இப்போ டெல்லியிலே அரசியல்லே இருக்கான்; ரொம்ப கெட்டிக்காரன். அவன் கையைச் சொடக்கினான்னா மந்திரி சபையே கலைஞ்சுடும்'' னார். ''அடிக்கடி சொடக்கு வாரோ?''னு கேட்காம, ''எழுத்தாளர்னேளே!''ன்னு கேட்டேன்.

''ஓ! அவன் அரசியல் கட்டுரைகள் அடிக்கடி பத்திரிகையிலே பிரபலமா வருதே! இரண்டாவது பையன் கிரிக்கெட்லே யமனே தான்! அவன் 'ஸ்போர்ட்ஸ்' கட்டுரைகள் வாராவாரம் கொடுத் துண்டு வரான், ஒரு தினசரிலே!''

''பேஷ், பேஷ்!''

''மூன்றாவது பெண்; புக்காத்திலே இருக்காள். வாரப் பத்திரிகையிலே 'சித்தியின் சிங்காரம்'னு ஸ்திரீகள் பகுதி, அவள் பேரிலே தவறாமே வரது...''

''சபாஷ்!''

''நாலாவது பயல் கார்ப்பரேஷன் ஜனன - மரண ஆபீஸ்லே குமாஸ்தா. சக்கைப் போடு போட றான். ஒன்பது பத்திரிகைகளுக்கு அவன் வார பலன் பகுதி எழுதறான். நல்ல கற்பனை போங்கோ! ஒரு பத்திரிகையிலே வராப்லே இன்னொண்ணுக்குக் கொடுக்க மாட்டான். புதுசு புதுசா இருக்கும்.''





''பலே, பலே! அப்றம்..?''

''அஞ்சாவது பையன் நடிகனா இருக்கான். போன வாரம் கூட அவன் கட்டுரை 'சோக நடிப்பைச் சிரிக்காமல் செய்ய வேண்டுமா?'ன்னு பார்த்திருக்கலாமே!''

''ஆறாவது பையனும்...''

''இல்லை; பெண் அவள். அவளுக்கு ஏழு குழந்தைகள். இதோடே அவள் 'சுக வாழ்வு'ன்னு வைத்தியப் பகுதி ஒண்ணு விடாமே...''




மாமா ரொம்பச் சந்தோஷப்பட்டுண்டு, ''போறது! உங்க பசங்க அத்தனைபேருமே பத்திரிகை மூலம் பிரபலமாயிருக்கா!''ன் னார்.

அவர், ''இன்னொரு பய இருக்கான். அவன்தான் பிரயோசனமில்லே''னு சொன்னார். அப்போ அவர் மொகம் அப்பா 'மார்க்கெட்' லேருந்து வாங்கிண்டு வர கறிகாய்கள் மாதிரி ஒரேமிக்க வாடி வதங்கிப் போயிருந்தது.

''ஏன் ஸார்! அவன் என்ன பண்ணிண்டிருக்கான்?''

''அவனைக் கவனிக்கற பேர் இல்லை ஸார்! ஒரு பத்திரிகையிலே உதவி ஆசிரியரா இருக்கான். அவன் வேலையைச் செஞ்சுண்டு வரான். அவனாலே ஒரே ஒரு ஒபயோகம்... அவன் அண்ணன் - அக்காமார்களுக்குத் தவறாமே கட்டுரைகள் எழுதித் தந்துடறான். வேற ஒரு ப்ரயோஜனமுமில்லை, ஸார்!'' அப்படீன்னார் அவர்.

ஆகையாலே, இந்தக் காலத்திலே அவன் அவன் தொழிலைச் செஞ்சு பிரபலமாகி விடறது என்கிறது மட்டும் கிடையாது! அப்படி ஆயிடுத்து ஒலகம்!

[நன்றி: ஆனந்த விகடன்; ஓவியம் :கோபுலு ]


தொடர்புள்ள சில பதிவுகள் :

கண்ணன் கட்டுரை -2

கண்ணன் கட்டுரை -3

கண்ணன் கட்டுரை -4

தேவன்: படைப்புகள்


தேவன் நினைவுகள்

மிஸ்டர் ராஜாமணி : கதைகள்

தேவன்’: துப்பறியும் சாம்பு