வியாழன், 24 ஜூன், 2010

'தேவன்':கண்ணன் கட்டுரை-2

மக்காவது... சுக்காவது..!
தேவன்

(ஒரு எழுத்தாளரின் சின்னப் பிள்ளை எழுதிப் பார்க்கிறான்)

(24.2.52)




'இந்தக் காலத்திலே நல்ல வேலையைக் காண்றதுன்னா சிவராத்திரியன்னிக்குச் சந்திரனைத் தேடறாப்லே'ன்னு பாட்டி சொன்னா. அப்பாவைக் கேட்டா, கடையிலே காப்பிக் கொட்டை வாங்கற மாதிரின்னு சொல்றார். முன் காலத்திலே, உத்தியோகம் வேணும்னா பெரிய மனுஷா சிபார்சு இருந்தாப் போறுமாம்; இந்தக் காலத்திலே அதுக்குப் பெரிய மனுஷாளாவே இருக்க வேண்டியிருக்காம்..!

எத்தனையோ பேர் வேலையில்லாத் திண்டாட்டம் போகணும்னு ஒரே வேலையாச் சொல்லிண்டிருக்கா. வேலை கெடைக்கிற முந்தி, எதுவானாலும் போறும்கறா; அது கெடைச்ச பேரோ, அது நன்னா இல்லையேனு மொனகிண்டிருக்கா!

இப்படித்தான் ஒருத்தன் எதானும் ஒரு வேலை கேட்டுண்டு வந்தானாம். மானேஜர் எரக்கப்பட்டு ஆபீஸ் பையனா வெச்சுண்டாராம். அப்புறம் அவன் ஆபீஸ் ரகஸ்யம் எல்லாம் தெரிஞ்சுண்டு மேலே மேலே வந்து மானேஜர் எடத்தையே புடிச்சுண்டானாம். ''நான் ஒரு முட்டாள்''னு மானேஜர் தலேல அடிச்சுண்டாராம். ஒடனே அவன், ''முட்டாள்களுக்கு இந்த ஆபீஸ்லே எடம் இல்லே''னு விரட்டிட்டானாம்.




அப்பாகிட்ட ஒருத்தர் வேலைக்கு, ஒரு பெரிய மனுஷர்கிட்டே சிபார்சுக் கடுதாசி வாங்கிண்டு வந்தார். அப்பாவாலே வேலை பண்ணி வைக்க முடியல்லே. ஆனா, அந்த மனுஷர் கொஞ்ச நாளிலே ரொம்ப சிநேகிதராப் போயிட்டார். ஒரு நாளைக்கு அவர் திடீர்னு வந்து, ''ஒங்களாலே ஒரு ஒபகாரம் ஆகணும்! நீங்க சொன்னா நடந்துடும்''னார்.

''சொல்லுங்கோ!''ன்னார் அப்பா.

''அந்தப் பெரிய மனுஷரே ஒரு ஆபீஸ் தொடங்கியிருக்கார். நிறையப் பேருக்கு அதிலே வேலை கொடுக்கிறார். உங்க கையாலே ஒரு சிபார்சு லெட்டர் கொடுத்தா, எனக்கும் ஒண்ணு கட்டாயம் கொடுத்துடுவார்...''

அப்பா பிரமிச்சுப் போயிட்டார். ''நீங்களே எனக்கு அவர்கிட்டத்தானே லெட்டர் வாங்கிண்டு வந்தேள்?'' அப்படீன்னார்.

''ஆமா! இப்போ அவரை விட நீங்க தெரிஞ்சவரா போயிட்டேளே!''

அப்பாவுக்கு ரெண்டு பயம்; அந்தப் பெரிய மனுஷரை நன்னாத் தெரியாதே என்கிறது ஒண்ணு; தன் லெட்டரை மதிக்கிற அளவு தான் பெரிய மனுஷர் இல்லையே என்கிறது ரெண்டு. நம்ம சிபார்சுக்கு மதிப்பு வரணும்னா எப்படி இருக்கணும்னு ஒரு கதை கூடச் சொன்னார் அப்பா...
ஒரு பெரிய ஆபீஸ்லே ஒரு வேலை காலியாச்சாம். இந்தச் சமாசாரம் செவிடாள் உள்பட எல்லார் காதிலேயும் விழுந்துட்டுதாம். ஒடனே அந்த ஆபீஸை நோக்கி, கிரிக்கெட் மாச்சுக்குப் போறாப்லே பட்டதாரிகள் போனாங்களாம்.

மானேஜர் வெளிலே வந்து, பழக் கடையிலே ஆரஞ்சுப் பழம் பொறுக்கறாப்லே மூணு பேரை நிறுத்தி வெச்சுண்டு, பாக்கிப் பேரை ''போங்கடா வேலையத்தவங்களா!''னு வெரட்டிட்டாராம்.


அந்த மூணு பேர்லே முதல் ஆளைப் பார்த்து, ஒரு தியேட்டர் பேரைச் சொல்லி, ''ஓய்..! நீர் போய் நமக்கு அந்தத் தியேட்டரிலே இன்னிக்கு ஒரு டிக்கெட் கொண்டு வாரும்! உம்ம சாமர்த்தியத்தைப் பார்க்கிறேன்''னார். அவன் அசந்து போனான். அன்னிக்குதான் அதிலே ஒரு புதுப்படம் ஆரம்பமாம்!

இரண்டாவது ஆளைப் பார்த்து ''நீர் ட்ராம்லே பாரீஸ் கார்னருக்குப் போய் பஸ்ஸிலே திரும்பி வந்துடணும். பார்க்கலாம்!''னார். அவன் தலையைப் புடிச்சுண்டான்; அது அப்படிச் சுத்தித்து.

மூணாவது ஆள் கையிலே ஒரு மூணு ஸ்தானக் கூட்டல் கணக்கைக் கொடுத்து, ''இதைப் போட்டு வையும், பார்க்கலாம்''னார்.

சரியா ஆறு மணி அடிச்சது. மானேஜர் கார்யதரிசியைக் கூப்பிட்டு, ''அந்தப் பசங்கள் வந்தாங்களா?"ன்னு கேட்டார்.

''ஓ! மொதல் பேர்வழி எப்படியோ டிக்கெட் கொண்டு வந்துட்டான்; ரெண்டாவது ஆள் ட்ராம்லே போய் பஸ்ஸிலே வந்துட்டான். ரொம்ப சாமர்த்தியசாலிகள் ஸார், ரெண்டு பேரும்!''

''உம்ம்.. அப்றம்..?''

''மூணாவது ஆள் கணக்கைப் பத்துத் தரம் போட்டிருக்கான். பத்து விடை வந்தது. அத்தனையும் தப்பு!''

''உம்... சரி! மூணாவது ஆளை வேலைக்கு வெச்சுண்டு, பாக்கி ரெண்டு பேரையும் வெளியிலே வெரட்டு! நமக்கு வாண்டாம்!''

''ஸார், ஸார்..! அந்த ஆள் ரொம்ப மக்காச்சே!''

''மக்கானால் என்ன ஓய்..! அவன் நம்ம ஊர் கலெக்டர் மருமான் ஆச்சே, அது போறாதா?'' அப்டீன்னாரே, பார்க்கலாம் அந்த மானேஜர்!

நீங்க கதை எழுதப் போறெளா..?

[நன்றி: ஆனந்த விகடன்]

தொடர்புள்ள சில பதிவுகள்:

கண்ணன் கட்டுரை -1

கண்ணன் கட்டுரை -3

கண்ணன் கட்டுரை - 4

தேவன்: படைப்புகள்

தேவன் நினைவுகள்

மிஸ்டர் ராஜாமணி : கதைகள்

தேவன்’: துப்பறியும் சாம்பு

1 கருத்து:

Angarai Vadyar சொன்னது…

Devan is always enjoyable. Thanks.