சனி, 26 ஜூன், 2010

'தேவன்':கண்ணன் கட்டுரை-3

நீங்க கதை எழுதப் போறெளா..?

தேவன்

(ஒரு எழுத்தாளரின் சின்னப் பிள்ளை எழுதிப் பார்க்கிறான்)

(9.1.55)

நாமும் எழுத்தாளனாகணும்கிற ஆசை அநேகம் பேருக்கு இருக்கு. எங்கப்பாவோடே சிநேகிதாள், மச்சினன்கள், மருமான்கள், ஒண்ணு விட்ட தம்பிகள் எல்லாரும், ''ஒரு சான்ஸ் கொடுங்கோ! கொளுத்திக் காட்டுறோம். ஊதிக் காட்டுறோம்''னு அடிக்கடி கேக்கறா. (பத்திரிகை வேலைன்னா சிகரெட்டா... கொளுத்தறதுக்கும் ஊதறதுக்கும்!) அப்பா என்னைக் கூப்பிட்டு, ''எலே! உங்கம்மா தினம் தவறாமே வெண்டைக்காய் கறி பண்றதனாலே எனக்குப் பயித்தியம் பிடிக்காதுடா! இந்தப் பசங்கள் பிடுங்கலிலேயே மூளை கலங்கிடும்டா!'' அப்படீன்னு சொல்லி ரொம்ப வருத்தப்பட்டுண்டார்.

எதுக்குச் சொல்ல வந்தேன்னா... எதை எழுதினாலும் ஜனங்க வாசிப்பானு தப்பா நினைக்கிறா. வர கடிதாசுகளிலே கடோசி வரியைத்தான் எங்கப்பா படிப்பார். ஒடனே, ''எங்கிட்டே பணம் இருக்குன்னு தவறா நினைச்சுண்டிருக்கா இவா''ன்னு கீழே போட்டுடுவார். ஆபீஸ் டயத்திலே இருபத்தொண்ணாம் நம்பர் பஸ்ஸிலே கூட ஏறிப்பிடலாம்; அதைவிடக் கஷ்டம் பத்திரிகையிலே எழுத எடம் கிடைக்கிற காரியம்.

எழுதற விஷயம் ஜனங்களுக்குப் பிடிச்சிருக்கோ இல்லையோ, ஒதவி ஆசிரியருக்குப் பிடிச்சிருக் கணும். காலத்துக்கு ஏத்த மாதிரி எழுதினாக் கூடப் பிரயோசனம் இல்லை. இப்போ நான் நம்ம 'தண்டு' கதையைச் சொன்னால் எல்லாம் புரிஞ்சுடும்.

அவருக்குத் தபால்காரா மேலே ரொம்ப எரிச்சல். பின்னே, ஓயாம அவர் கதைகளைத் திருப்பிக் கொண்டு வந்தால்? கடோசியா அவர் ஒரு மிக மிக நல்ல கதை எழுதி, நேரே ஒதவி ஆசிரியரை பேட்டி கண்டு, ''இப்போ இதை வாசிக்கிறீரா? இங்கேயே தற்கொலை பண்ணிக்கட்டுமா?'' அப்படின்னார். அந்த ஒதவி ஆசிரியர் புன்னகை செய்து, ''வாசிக்கிறேன். எதற்கும் நீர் போய் நம்ம 'கான்ட்டீன்'லே டிபன் பண்ணிவிட்டு வாரும், பார்க்கலாம்!''னார்.

'தண்டு' திரும்பி வந்தபோது, ஒதவி ஆசிரியர் உலாத்திண்டிருந்தார். கதையை அவசரமா கூடையிலேருந்து எடுத்து, ''பேஷா இருக்கிறது கதை!'' அப்படீன்னார். 'தண்டு' வயிறெல்லாம் 'கபகப'ன் னுண்டிருந்த 'வெஜிடபிள் குருமா' கூட 'ஜில்'லுனு போச்சு. 32 பல்லையும் காட்டி, ''அப்படியா! அது எப்போ பிரசுரமாகும்?''னு கேட்டார்.


''அதுவா! ஜனங்கள் இன்னும் இதைப் படிக்கத் தயாராகல்லை. 20 வருஷம் கழிச்சுப் போட்டால் நன்னாயிருக்கும்''னார் அந்த ஒதவி ஆசிரியர்.

'தண்டு'வோட மனசு பூஷணிக்காய் மாதிரி உடைஞ்சு போச்சு. அந்த ஏக்கத்தோடேயே திரும்பி வரபோது, மூணாம் நம்பர் பஸ்ஸிலே கதையையும் காணடிச்சுட்டு, எழுதறதையும் நிறுத்தி விட்டார்; கிராமத்திலே போய் பயிர்ச் செலவு பண்ணிண்டிருந்தார்.

இருபது வருஷத்துக்கு அப்றம்தான் 'தண்டு' பட்டணத்துக்கு வந்தார். முப்பத்தி மூணாம் நம்பர் பஸ்லே எடமும் கெடைச்சுது. பழைய நினைவெல்லாம், பொங்கல் இனாம் கேழ்க்க வரவங்க மாதிரி 'க்யூ' வரிசைலே கூச்சல் போட்டுது. குனிஞ்சு பார்த்தால், ஸீட் அடியிலே ஒரு காகிதக் கட்டு சிக்கிக் கிடந்தது. எடுத்துப் பிரிச்சுப் படிச்சால், அவர் முன்......னே எழுதின கதை! 20 வருஷமா நம்ம சர்க்கார், பஸ்களை அப்படியே நலுங்காமே வச்சிருந்து நம்பரை மட்டும் மாத்தி ஓட்டறா!

'ஆஹா'ன்னார் நம்ம 'தண்டு'. கதையோடே ஓடினார். ஒதவி ஆசிரியர் அதே அறையிலே அதே மாதிரி உலாத்திண்டிருந்தார். முன் போலவே கதையைப் படிச்சுட்டு, ''பேஷாயிருக்கிறது கதை!'' அப்படீன்னார். 'தண்டு' தன்னோட 14 பல்லையும் காட்டி, ''அப்படியா? சந்தோஷம்! எப்போ இது பிரசுரமாகும்?''னு கேட்டார்.

ஒதவி ஆசிரியர் வழுக்கையைத் தடவிண்டே, ''பிரசுரம் செய்ய றதா? இந்தக் காலத்து ஜனங்க இதையெல்லாம் வாசிக்கமாட்டா ஓய்! இருபது வருஷம் முந்தி கொணர்ந்திருந்தீர்னா போட்டிருப்பேன்!'' அப்படீன்னார்.

''உமக்கென்ன வயசு?'' னு கேட்டார் 'தண்டு' வெடுக்குனு.

''ஏன்..? அறுபதாகிறது!''

'தண்டு' ஒரு நாற்காலியை அலாக்காய்த் தூக்கி, ''ஏனா? அறுபது வருஷத்துக்கு முந்தி நீர் பொறந்திருக்கவே கூடாது!''ன்னு சொல்றப்போ, நல்லவேளையா ஆபீஸ் பையன் ஓடி வந்து நாற்காலியைக் காப்பாத்தினான்.

எதுக்குச் சொல்ல வந்தேன்னா, எழுத்தாளனைக் கோபமூட்டப் படாது; எக்கச்சக்கமா ஆயிடும்! என்னைக் கேட்டா, பசிக்கிறபோது சாப்பிட்டுடணும்; தூக்கம் வர போது தூங்கிடணும்; எழுத வர போது எழுதிடணும். ஒலகம் முன்னேற, அது ஒண்ணுதான் வழி!

தெரியாமலா பெரியவா சொன்னா, வேலை செய்றவனுக்கு வேலையைக் கொடு; வேலை செய்யாதவனுக்குச் சம்பளத்தைக் கொடு அப்படின்னு?

[நன்றி: ஆனந்த விகடன் ]

தொடர்புள்ள சில பதிவுகள்:

கண்ணன் கட்டுரை - 1

கண்ணன் கட்டுரை - 2

கண்ணன் கட்டுரை - 4

தேவன் நினைவுகள்

மிஸ்டர் ராஜாமணி : கதைகள்

தேவன்’: துப்பறியும் சாம்பு

தேவன் படைப்புகள்

1 கருத்து:

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

என்னமா எழுதிருக்கார்..