ஞாயிறு, 17 ஜூலை, 2011

’தேவன்' : தினமணிக் கட்டுரை

துப்பறியும் "தேவன்'!
பரிபூர்ணா


[ நன்றி: தினமணி, 26 Jun 2011 ]

உலகில் உள்ள அனைவரையும் அழவைப்பது என்பது எல்லோராலும் முடியும் என்பது மட்டுமல்ல, அது எல்லோருக்கும் கைவந்த கலையும்கூட. ஆனால், சிரிக்க வைப்பது சிலரால், அதுவும் மிகச் சிலரால் மட்டுமே முடியும். அந்த வகையில், தன்னுடைய படைப்புகளின் மூலம் வாசகர்களை வயிறு குலுங்கச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் நகைச்சுவை எழுத்தாளர் "தேவன்' என்கிற ஆர்.மகாதேவன்.

"அழுபவனை சிரிக்க வைக்க வேண்டும்; சிரிப்பவனை சிந்திக்க வைக்க வேண்டும், அதுதான் என் வாழ்வின் லட்சியம்'' என்று எம்.ஜி.ஆர். ஒரு திரைப்படத்தில் வசனம் பேசியிருக்கிறார் (நான் ஏன் பிறந்தேன்?). இந்த வசனம் முழுக்க முழுக்க தேவனுக்குத்தான் பொருந்தும்.

துப்பறியும் சாம்புவை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள், மறக்கவும் முடியாது. தேவனின் எழுத்தாளுமை அப்படிப்பட்டது. நகைச்சுவை உணர்வும், நுட்பமான நுண்ணறிவும், பன்முக ஆற்றலும் கைவரப்பெற்றவர்; நகைச்சுவை இலக்கியத்தை வளர்த்து வாழவைத்தவர்.

ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார் என்ற எண்ணிக்கையை விட, அவர் வாழ்ந்த காலத்தில் என்னென்ன சாதனைகளைப் புரிந்தார் என்பதுதான் முக்கியம். அதைத்தான் வள்ளுவப்பெருந்தகை

"தோன்றின் புகழோடு தோன்றுக; அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று'' (236)

என்றார். இந்தக் குறளுக்கு, உலகில் தோன்றுதல் (பிறத்தல்), நல்லோர் - சான்றோர் சூழ்ந்த அவையில் தோன்றுதல் - இப்படிப் பல விளக்கங்களைக் கூறலாம். எங்கே எப்படித் தோன்றினாலும் அதில் தலைமைத்துவத்துடன் திகழவேண்டும் என்பதுதான் இதன் பொருள். அவ்வாறு இல்லாதபோது உலகில் தோன்றுவதோ (பிறப்பதோ). சபையில் தோன்றுவதோ வீண் என்கிறார். எதற்கு இத்தனை பீடிகை என எண்ண வேண்டாம். மனிதப் பிறவி எடுத்த அனைவரும் பிறரைச் சிரிக்க வைக்க முடியவில்லை என்றாலும், அழவைக்காமலாவது இருக்க வேண்டும். அதுவே மிகச் சிறந்த நாகரிகமும் அறமுமாகும். இந்த நல்ல நாகரிகத்தை - அறத்தை நாம் நகைச்சுவை எழுத்தாளர் தேவனிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்.

தேவன், இவ்வுலகில் வாழ்ந்த காலம் 43 ஆண்டுகள்தான். ஆனால், அதற்குள் எத்தனை எத்தனை படைப்புகள்; எத்தனை பேரை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார். உலகில் பிறந்து, வெறுமனே வாழ்ந்துவிட்டுப்போக நாம் என்ன அஃறிணை படைப்பா? ஆறறிவு படைத்த உயர்திணை அல்லவா? அதற்காகத்தான் இத்தனை விளக்கங்களும்!

÷கயிலைக்கு இணையாகப் புராணங்களில் கூறப்படும் மத்தியார்ஜுனம் என்கிற திருவிடைமருதூரில் (குடந்தையை அடுத்துள்ள ஊர்) 1913-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி பிறந்தார். அவ்வூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப் பள்ளில் படித்தார். மகாதேவன், பள்ளியில் சாரணர் படையில் சேர்ந்திருந்ததால், சாரணப்படைத் தலைவராக இருந்த கோபாலசாமி ஐயங்கார், மாணவர்களுக்கு நிறைய சிறுகதைகளைச் சொல்வாராம். மாணவர்களையும் கதை சொல்லச் சொல்லி ஊக்குவிப்பாராம். இதனால்தான் கதை கட்டுவதில் மகாதேவனுக்கு ஆர்வமும் சுவையும் தோன்றியதாம்.

÷பின்னர், கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். பிறகு பள்ளி ஆசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார். 21-வது வயதில் "ஆனந்த விகடன்' இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1942 முதல் 1957 வரை நிர்வாக ஆசிரியராக இருந்தார். ஆனந்த விகடனில், கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் நகைச்சுவை கட்டுரைகளையும் தொடர்களையும் எழுதினார்.

÷பத்திரிகைத் துறையில் இவர் கையாளாத உத்திகளே இல்லை என்று கூறலாம். நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் "தேவன்' என்ற புனைபெயரில் எழுதினார். இவருடைய துப்பறியும் சாம்பு, கோமதியின் காதலன், ராஜாமணி, ரங்கூன் பெரியப்பா, வரப்பிரஸாதி, மறக்கமுடியாது, விச்சுவுக்குக் கடிதங்கள் ஆகிய படைப்புகள் மிகவும் பிரபலமானவை.


÷துப்பறியும் சாம்பு தொலைக்காட்சியில் தொடராகவும், கோமதியின் காதலன் திரைப்படமாகவும் வெளிவந்தன. மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், மிஸ் ஜானகி, மைதிலி, கல்யாணி, துப்பறியும் சாம்பு ஆகிய நாவல்கள் மேடை நாடகங்களாக நடத்தப்பட்டன. வேதாந்தம், ஸ்ரீமான் சுதர்சனம் ஆகிய இரு நாவல்களும் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டன. வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எழுதிய பயண நூல்தான், "ஐந்து நாடுகளில் அறுபது நாட்கள்'. இதைத்தவிர "நடந்தது நடந்தபடியே' என்ற பயண நூலையும் எழுதியுள்ளார்.

÷இவை தவிர, அப்பளக்கச்சேரி, பெயர்போன புளுகுகள், ராஜத்தின் மோதரம், கமலம் சொல்கிறாள், போடாத தபால், சரசுவதிக்குக் கடிதங்கள், அதிசயத் தம்பதிகள், கண்ணன் கட்டுரைகள், லட்சுமி கடாட்சம், சி.ஐ.டி. சந்துரு, ராஜியின் பிள்ளை, மல்லாரி ராவ் கதைகள், சின்னஞ்சிறு கதைகள், பிரபுவே உத்தரவு, சீனுப்பயல், மாலதி, போக்கிரி மாமா, மனித சுபாவம், ஏன் இந்த அசட்டுத்தனம், பார்வதியின் சங்கல்பம், சொன்னபடி கேளுங்கள், மோட்டார் அகராதி, ஜாங்கிரி சுந்தரம் - இப்படி புதினம், சிறுகதைகள், கட்டுரைகள், தொகுப்புகள், பயணக் கட்டுரைகள், கதைத் தொடர்கள் என பலவற்றை எழுதிக் குவித்திருக்கிறார்.



÷நீதித்துறை தவிர மற்ற அனைத்துத் துறைகளைப் பற்றி சிறுகதை, நாவல், நாடகம், முதலியவை அதிகம் வெளிவந்துள்ளன. ஆனால், நீதித்துறை பற்றிய விரிவான நாவலோ, நாடகமோ, சிறுகதையோ மிகவும் குறைவு. அந்த மிகப்பெரிய குறையை, "ஜஸ்டிஸ் ஜகந்நாதன்' நாவல் மூலம் தேவன் நிறைவு செய்துள்ளார்.

÷நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றிய மிக விரிவான நாவல்தான் ஜஸ்டிஸ் ஜகந்நாதன். இந்நாவல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஜஸ்டிஸ் ஜகந்நாதனை அறிமுகப்படுத்தும்போது, தொல்காப்பியர் குறிப்பிடும் "வனப்பு' பற்றி கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.

""மனிதனுக்கு யௌவனப் பருவத்திலே ஒரு வனப்பு உண்டு. இந்த வனப்பு கேவலம், இளமையினாலும் உடல் ஆரோக்கிய நிலையினாலும் ஏற்படுவதுதான். எத்தனையோ மகான்கள், பெரியவர்கள், அறிஞர்கள் இந்தப் பருவத்திலே மேலே குறிப்பிட்ட வனப்பை விசேஷமாகப் பெற்றவர்கள் இல்லை. ஆனால், அறுபது வயது ஆகிவிடும்போது, விவரிக்க முடியாத ஒரு கம்பீரமான வசீகரம் அவர்களை வந்து அடைந்து விடுகிறது.

அறிவின் மேன்மையுடன், பண்பட்ட இதயத்தின் சிறப்பும், மேதையின் முதிர்ச்சியும்தான் இந்த வசீகரத்தின் ரகசியம். பார்ப்பவர்களுக்கு, ஒரு முறைக்கு நூறுமுறை இந்த தேஜசைக் காணவேண்டும்; கண்டு, கண்கொட்டாமல் வெகுநேரம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆவல் பிறக்கும். ஜஸ்டிஸ் ஜகந்நாதன் வதனத்திலும் இந்த மாதிரியான காந்தமொன்று இருப்பதை எத்தனையோ பேர் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்'' - கனிந்த பழம்தான் இனிக்கும் - ருசிக்கும் என்பதை எத்தனை அழகாக, அருமையாக எழுத்தில் கொண்டுவந்துள்ளார் தேவன்.

÷""ஒரே ஒரு கட்டுரையினால், ஒரே நாளில், தமிழ்நாடெங்கும் பிரசித்தமாகிவிட்டார் தேவன். முதன் முதலில் கையெழுத்துப் பிரதியில் அவர் கட்டுரையைப் படித்தபோது, இவ்வளவு குதூகலத்துடன் குழந்தைகளின் வாழ்க்கையை எழுதும் இந்த ஆசாமி யார் என்று வியப்படைந்தேன். இவரோ, இன்னும் இருபது வயது நிரம்பாத இளைஞர் என்று அறிந்தபோது அளவிலாத மகிழ்ச்சி உண்டாயிற்று. குழந்தைகளின் அற்ப சந்தோஷங்களையும் துக்கங்களையும் மட்டுமல்ல, வயதான மனிதர்களுடைய மகா அற்ப சுக துக்கங்களையும் அவ்வளவு குதூகலத்துடன் எழுதக் கூடியவர் தேவன்' என்று கல்கி புகழாரம் சூட்டியுள்ளார்.

""தேவனின் கதைகளை ஒன்றுவிடாமல் படித்தவன் நான். அவர் ஒரு தலை சிறந்த நகைச்சுவை எழுத்தாளர். என்போன்ற எழுத்தாளர்களுக்கு அவர் முன்னோடியாகவும், மானசீக ஆசானாகவும் இருந்திருக்கிறார். தேவன் என்றைக்கும் இருப்பார். அவர் நிஜமாகவே தேவன்தான்'' என்று எழுத்தாளர் சுஜாதா கூறியிருக்கிறார்.

÷சென்னை - தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக இருமுறை பதவி வகித்திருக்கிறார் தேவன். பள்ளி ஆசிரியர், பத்திரிகையாசிரியர், பத்திரிகை நிர்வாக ஆசிரியர், நகைச்சுவை எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்ட தேவன், 1957-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி காலமானார்.

÷தேவன் நினைவாக, ஆனந்தவிகடன் 5.5.57-இதழில், "விகடனின் மகத்தான நஷ்டம்' என்ற தலைப்பில், "கடந்த 23 ஆண்டுகளாக அவர் (தேவன்) எழுதிய சிரஞ்சீவி இலக்கியங்கள் நம் கண்முன் இருக்கின்றன, ஆனால், தேவன் மறைந்துவிட்டார். வடபழனி ஆண்டவனைப் பற்றி எழுதிய பேனா மன்னர், அவர் திருவடிகளிலேயே இரண்டறக் கலந்துவிட்டார்' என்று நினைவஞ்சலி செய்துள்ளது.

தொடர்புள்ள சில பதிவுகள்:

தேவன் நினைவு நாள் , 2010

தேவன்: கல்கி என்னும் காந்த சக்தி

தேவன்: நினைவுகள் -2