சனி, 4 ஜனவரி, 2014

சங்கீத சங்கதிகள் - 24

கம்பனைப் பாட ஒரு புதிய ராகம்! 
உ.வே.சாமிநாதய்யர் 


[ ஓவியம்: கோபுலு ; நன்றி: தினமணி  இசைச் சிறப்பிதழ், 97 ]

2001 ஆண்டில் 'இசைப் பேரறிஞர்' என்ற பட்டத்தை சங்கீத கலாநிதி மதுரை சேஷகோபாலனுக்கு தமிழிசைச் சங்கம் அளித்தது. அந்த வருடம் கவிஞர் கண்ணதாசன் கவிதைகளுக்கு ராகங்கள் அமைத்து , வித்வான் சேஷகோபாலன் தமிழிசைச் சங்கத்தில் முழுநேரக் கச்சேரி செய்தார்.
முதற் பாடல் ஒரு வெண்பா.

எத்திக்கும் தித்திக்கும் இன்பக் கவிதைகளைச் 
சித்திக்கும் வித்தாகச் செப்புகின்றான் -- சத்திக்கும் 
கண்ணதா சக்கவிஞன் கந்தன் கருணையினால் 
வண்ணமுடன் வாழி மகிழ்ந்து. 

இது கிருபானந்தவாரியார் கண்ணதாசனுக்கு அளித்த ஒரு வாழ்த்துப்பா.
( கண்ணதாசன் கவிதைத் தொகுப்பு-4 இல் , அணிந்துரையின் கடையில், இருக்கும். )

இந்த நேரிசை வெண்பாவை, சேஷகோபாலன் ஹம்ஸத்வனி ராகத்தில் பாடினார்.

தற்காலத்தில் இத்தகைய இயற்பாக்களை வேறு எந்த ராகத்திலும் பாடுவதற்கும் ஒரு தடையுமில்லை. ஆனால், பழங்காலத்தில் சில பாக்களைச் சில ராகங்களில்தான் பாடுவது என்ற மரபு இருந்தது. “சம்பூர்ண ராமாயணம்” படத்தில் வரும் ” வீணைக் கொடியுடைய வேந்தனே” என்ற பாடலை அனைவரும் கேட்டிருப்பர். ராவணனுக்குக் குரல் கொடுத்த வித்வான் சி.எஸ்.ஜயராமன் அதில் வெண்பாவிற்குச் சங்கராபரணம், அகவற்பாக்குத் தோடி என்றெல்லாம் பாடுவதைக் கேட்டிருக்கிறோம். இப்படிப் பாடுவது பற்றி ஆபிரகாம் பண்டிதர் தன் “ கருணாமிர்த சாகரம் “ என்ற நூலில் விவரமாய் எழுதியுள்ளார். உதாரணமாய், விருத்தங்களைக் கல்யாணி, மத்தியமாவதி, காம்போதி போன்ற ராகங்களில்தான் பாடுவார்கள் என்று எழுதியுள்ளார்.

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் இத்தகைய மரபுகளைக் கடைபிடித்துத் தான் இயற்பாக்களைப் பாடுவார். அதுவும், இசையறிவு மிக்க சுப்பிரமணிய தேசிகர் போன்றோரின் முன்னிலையில், மிகக் கவனமாக இருப்பார். அவருடைய “என் சரித்திரம்” நூலிலேயே ஓர் இடத்தில், தேசிகர் முன்னர் எப்படிக் கட்டளைக் கலித்துறையைப் பைரவி ராகத்தில் பாடினார் என்று குறிப்பிட்டிருக்கிறார். அப்படிப்பட்ட உ.வே.சா. நிச்சயமாய்க் கம்ப ராமாயண விருத்தங்களை மரபின் வழியே, குறிப்பிட்ட பழைய ராகங்களில்தான் பாடியிருப்பார் என்று தானே நாம் நினைப்போம்? அதுதான் இல்லை! ஒருமுறை கம்பனின் விருத்தங்களைத் தேசிகர் முன்னிலையில் உ.வே.சா முற்றிலும் புதிய ஒரு ராகத்தில் பாடினார்!

ஏன்?எப்படி? என்று கேட்கிறீர்களா? இதோ, அவரே சொல்லட்டும்!

   
திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை

நானும் சண்பகக் குற்றாலக் கவிராயரும் சில தம்பிரான்களும் கம்பராமாயணத்தை ஆராய்ந்து படித்து வந்தபோது இடையிடையே சந்தேகங்கள் எழுந்தன. அவற்றைத் தெளிந்துகொள்ள வழியில்லாமல் மயங்கினோம். அக்காலத்தில் திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை என்னும் வித்துவான் கம்பராமாயண பாடம் சொல்வதில் சிறந்தவரென்று நாங்கள் கேள்வியுற்றோம்.

வித்வத்ஜன சேகரர்

அவர் கம்பராமாயணம் முழுவதையும் அச்சிட்டவர்; சுந்தர காண்டத்தைத் தாம் எழுதிய உரையுடன் வெளிப்படுத்தியவர்; ‘வித்வத்ஜன சேகரர்என்னும் பட்டமுடையவர்; திவ்விய பிரபந்த வியாக்கியானங்களிலும் வைஷ்ணவ சம்பிரதாய நூல்களிலும் அவருக்கு நல்ல பயிற்சி உண்டு. அவரை  வருவித்தால் இராமயணத்தைக் கேட்டுப் பயன் பெறலாமென்பது எங்கள்  கருத்து. அவர் அக்காலத்தில் பாபநாசத்துக்கு வடக்கேயுள்ள கபிஸ்தலமென்னும் ஊரில் இருந்தார். அங்குள்ள பெருஞ் செல்வராகிய ஸ்ரீமான் துரைசாமி மூப்பனார் என்பவருக்கு அவர் பல நூல்கள் பாடம் சொல்லிவிட்டு அப்போது  கம்ப ராமாயணம் சொல்லி வந்தாரென்று தெரிந்தது.

கோவிந்தபிள்ளை கபிஸ்தலத்தில் இருப்பதையும் அவரிடம் கம்ப ராமாயணம் பாடம் கேட்கும் விருப்பம் எங்களுக்கு உள்ளதென்  பதையும் நாங்கள் சமயம் அறிந்து சுப்பிரமணிய தேசிகரிடம் தெரிவித்தோம். அவர் கோவிந்தபிள்ளையின் திறமையைப்பற்றி முன்பே கேள்வியுற்றவர். அவர் மடத்திற்கு அதுவரையில் வராமையால் அவரது பழக்கம் தேசிகருக்கு இல்லை. மாணாக்கர்களது கல்வியபிவிருத்தியை எண்ணி எந்தக் காரியத்தையும் செய்ய முன்வரும் தேசிகர் உடனே மூப்பனாரிடம் தக்க மனிதரை அனுப்பிச் சில காலம் கோவிந்த பிள்ளையைத் திருவாவடுதுறையில் வந்து இருந்து மாணாக்கர்களுக்கு ராமாயண பாடம் சொல்லச் செய்யவேண்டும் என்று தெரிவிக்கச் செய்தார்.

என் உத்ஸாகம்

மூப்பனார் உடனே கோவிந்த பிள்ளையிடம் திருவாவடுதுறை மடத்தின் பெருமையை எடுத்துச் சொல்லி அவரைத் தக்க சௌகரியங்கள் செய்வித்துத் திருவாவடுதுறைக்கு அனுப்பினார். அவருடன் தேரழுந்தூர் வாசியாகிய ஸ்ரீ வைஷ்ணவ ஆசாரிய புருஷர் ஒருவரும் வந்தார். சுப்பிரமணிய தேசிகர் அவர்களுக்கு தக்க விடுதிகள் ஏற்படுத்தி உணவு முதலியவற்றிற்கு வேண்டிய பொருள்களும் அனுப்பி அவர்களுக்குக் குறைவின்றிக் கவனித்துக் கொள்ளும்படி ஒரு காரியஸ்தரையும் நியமித்தார். எல்லாம் ஒழுங்காக நடைபெறுகின்றனவா என்பதை விசாரித்துக் கொள்ளும்படி என்னிடமும் கட்டளையிட்டார். அந்த வித்வானுடன் பழகிப் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாமென்ற உத்ஸாகம் எனக்கு இருந்தது.

திருவாவடுதுறைக்குக் கோவிந்த பிள்ளை வந்த மறுநாள் பிற்பகலில் அவர் சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்து, இவ்விடத்திலுள்ள அமைப்புக்களையும் மாணாக்கர் கூட்டத்தையும் கண்டு என் மனம் மிக்க திருப்தியை அடைகிறதுஎன்று சொன்னார். கம்ப ராமாயணத்தில் ஏதேனும் ஒரு பாகத்தைச் சொல்லிப் பொருள் சொல்ல வேண்டுமென்று தேசிகர் கூறவே அவர் சுந்தர காண்டத்தில் காட்சிப் படலத்தின் முதற் பாடலிலிருந்து சொல்லத் தொடங்கினார். அவர் அருகிலிருந்து செய்யுட்களை நான் படிக்கலானேன். அவர் மிக்க செவிடராதலால் அவரது காதிற்படும்படி படிப்பது எனக்குச் சிரமமாக இருந்தது. போதாக் குறைக்கு, “என் காதிற் படும்படி ஏன் படிக்கவில்லை?” என்று அடிக்கடி அவர் அதட்டுவார்.

இசையில் வெறுப்பு

நான் ராகத்துடன் படிப்பது அவருக்குத் திருப்தியாக இல்லை. இசையைக் கொண்டுவந்து குழப்புகிறீரே. இதென்ன சங்கீதக் கச்சேரியா?” என்று சொல்லிவிட்டுத் திரிசிரபுரம் முதலிய இடங்களிற் சொல்லும் ஒருவிதமான ஓசையுடன் பாடலைச் சொல்லிக் காட்டி,
இப்படியல்லவா படிக்க வேண்டும்? உமக்குப் படிக்கத் தெரியவில்லையே!
என்று கூறினார். எனக்கு உள்ளுக்குள்ளே சிரிப்பு உண்டாயிற்று. பிள்ளையவர்கள் ஒருவரே இசை விரோதி என்று எண்ணியிருந்தோம். இவர் கூட அந்த இனத்தைச் சேர்ந்தவராக இருக்கிறாரேஎன்று எண்ணினேன். அவர் சொன்ன இசையும் எனக்குத் தெரியும். பிள்ளையவர்களும் தியாகராச செட்டியாரும் அந்த ஓசையோடுதான் பாடல் சொல்வார்களாதலால் எனக்கும் அந்தப் பழக்கம் இருந்தது. ஆதலால் கோவிந்த பிள்ளை சொன்ன இசையிலே நான் பாடலைப் படித்துக் காட்டினேன். இப்படியல்லவா படிக்க வேண்டும்!” என்று அவர் பாராட்டினார்.   தேசிகர், “ஏது, சாமிநாதையருக்கு இந்த ராகம்கூட வரும்போல் இருக்கிறதே!என்று சொல்லி நகைத்தார்.

இதை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் நேர்வதில்லை; இப்போது நேர்ந்திருக்கிறதுஎன்று சொன்னேன். ராகம்என்று அவர் பரிகாசத் தொனியோடு கூறினாரென்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

கோவிந்த பிள்ளையின் காதிலே படும்படி படித்துப் படித்து ஒரே நாளில் தொண்டை கட்டிவிட்டது.

[ நன்றி: “என் சரித்திரம்” நூல் ] 

பி.கு.

நண்பர் இரா.முருகனின் பின்னூட்டம்:

உ.வே.சா பாதம் பணிந்து வணங்குகிறேன். கோபுலு

 சாருக்கும் அன்பான வணக்கம்.

திருவாவடுதுறை ஆதினகர்த்தர் மேலகரம் சுப்பிரமணிய

 தேசிக சந்நிதானம், அந்த ஆதின வழக்கப்படி மழிக்கப்பட்ட

 தலையுடன் இருந்ததாக உ.வே.சா வரலாற்றில் காணலாம்.

 மற்றும் மடத்துக்கு வந்த   வித்துவான்திரிசிரபுரம் 

கோவிந்தப் பிள்ளை வைணவர். இவர்களின் ஓவியச்

 சித்தரிப்பில் இருக்கும் மிகச் சிறு குறைகளைப் புறம் தள்ளி

 அழகும் எளிமையும் கொண்ட உ.வே.சா உரைநடையிலும்,

 அற்புதமான கோபுலு சார் ஓவியத்திலும் அமிழலாம்


சன்னிதானத்தின் புகைப்படத்தை இங்கே பார்க்கலாம்:

http://ksuba.blogspot.ca/2013/06/52.html

தொடர்புள்ள பதிவுகள்: 

உ.வே.சா

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
ஐயா.
பதிவை மிகச்சிறப்பாக எழுதியள்ளீர்கள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Soundar சொன்னது…

சுவாரசியமான பதிவு. இந்த ராகத்துக்கு ஒரு பெயர் தேவை என்றால், 'பெஹ்ரா த்வனி' என்று கொடுக்கலாம்.

சௌந்தர்

arunsaba சொன்னது…

உ.வே.சா.எதையும் மிகச் சுவையாகச் சொல்வார்.அதைத் தாஙகள் எடுத்துத் தந்த விதமும் மிகச்சிறப்பு.சபா.அருணாசலம்