புதன், 14 மே, 2014

சாவி - 10: 'ஆப்பக்கடை' அம்மாக்கண்ணு

'ஆப்பக்கடை' அம்மாக்கண்ணு
சாவி


இந்தக் கேரக்டர் கட்டுரை விகடனில் 29-2-61-இல் வெளிவந்தது. சென்னைக்கே உரிய பாஷையில் திளைக்கிறார் 'சாவி' (சா.விசுவநாதன்).
அம்மாகண்ணுக்கும், சாவிக்கும் வாழ்க்கை அனுபவங்களில் ஓர் ஒற்றுமையும் உண்டு! அதைப் ‘போர்டு-பாஸ்’ ( Board-Pass )என்ற ஒரே வார்த்தை மூலம் நாம் ஆய்ந்தறியலாம்! மேலே படியுங்கள்! .
======

''சீ... கய்தே! இன்னாடா முறைக்கிறே! இந்த அம்மாக் கண்ணு கிட்டே வெச்சுக்காதே உன் வேலையெல்லாம்..! ஆப்பக் கரண்டியாலேயே போடுவேன். நெதம் நெதம் வந்து நாஷ்டா பண்ணிட்டுப் போனியே, அதப் போல பாக்கியைக் குடுக்க புத்தி வாணாம்? பெரிசா மீசை வச்சிக்கினு வந்துட்டான்!''

''மோவ்... தாஸ்தி பேசாத! பாக்கி வேணும்னா மரியாதையா கேட்டு வாங்கிக்க. நான் யார் தெரியுமா?''

''நீ யாராயிருந்தா எனக்கு இன்னாடா! பெரிய கவுனரா நீ! கயித கெட்ட கேட்டுக்கு மருவாதியாம் மருவாதி! துட்டை வெச்சுட்டு ரிஸ்காவை இசுடா! கண் மறைவாவா சுத்திக்கினுக்கீறே, பேமானி(1) !''

கூவம் நதி வாராவதிக்கு அருகில் ஒரு கட்டைத் தொட்டி. அதற்குப் பக்கத்திலுள்ள மரத்தின் கீழ்தான் அம்மாக்கண்ணுவின் ஆப்பக்கடை.
பொழுது விடிந்தால் அந்தப் பேட்டையிலுள்ள போலீஸ் காரர்கள், கை வண்டிக்காரர்கள், ஏழைகள், பிச்சைக்காரர்கள் எல்லோரும் நாஷ்டா(2) வுக்கு அம்மாக்கண்ணுவின் கடையைத் தான் நாடி வருவார்கள்.


அவள் சுட்டுப்போடும் ஆப்பங்களைச் சாப்பிட்டுவிட்டுச் சிலர் காசு கொடுப்பார்கள். சிலர் கடன் சொல்லிவிட்டுப் போவார்கள். ஆனால் அம்மாக்கண்ணுவை ஒருவரும் ஏமாற்ற முடியாது. டாணாக்காரர்கள் யாராவது வந்தால்,

'இன்னா பல்லைக் காட்டறே? ஓசி நாஷ்டாவா?''
என்பாள். கார்ப்பரேஷன் ஆள் வந்தால்,

'இங்கே ஓசிலே துண்ணுட்டு, அங்கே போயி ஆப்பத்திலே ஈ மொய்க்குதுன்னு கேசு எழுதிடு. ஏன்யா... ஈ மொய்க்கிற ஆப்பத்தை நீ மட்டும் துண்ணலாமாய்யா?” என்று கேட்பாள்.

வெளிப்பார்வைக்கு அவள் சற்றுக் கடுமையாகத் தோன்றினாலும், இளகிய மனசு படைத்தவள். கஷ்டப்படுகிறவர்களுக்குத் தன்னை மீறியும் உபகாரம் செய்யும் குணம் அவளிடம் உண்டு.

''பாக்கி கொடுக்க முடியலேன்னா, அதுக்காக ஏண்டா தலை தப்பிச்சுக்கினு திரியறே? பணம் கெடைக்கிறப்போ கொடு. நான் மாட்டேன்னா சொல்றேன்? இதுக்காவ நாஷ்டா பண்ண வரதையே நிறுத்திடறதா? ஒழுங்கா வந்து சாப்பிட்டுக்கினு போயிக்கினு இரு'' என்று சிலரிடம் அன்பொழுகப் பேசி அனுப்புவாள்.

''நாடாரே, கொஞ்சம் கடையைப் பார்த்துக்க. கஞ்சித்தொட்டி ஆசுபத்திரி வரைக்கும் போயிட்டு வந்துடறேன்!''

''ஆசுபத்திரியிலே இன்னா வேலை?''

''முருவன் இல்லே... அதாம்பா, நெதைக்கும் இங்கே வந்து ஆப்பம் துண்ணுவானே, பிச்சைக்கார முருவன்... அவன் மேலே கார் மோதிடுச்சாம், பாவம்! ஆசுபத்திரியிலே படுத்திருக்கானாம். அவனைப் போய் பாத்துட்டு, ரெண்டு ஆப்பத்தையும் குடுத்துட்டு வந்துடறேன்!''

''சரி; கொஞ்சம் பொயலை இருந்தா குடுத்துட்டுப் போ!'' என்பார் நாடார்.

''உக்கும்! ஈர வெறவெல்லாம் வித்து வர துட்டை முடிபோட்டு வச்சுக்கோ'' என்று சொல்லிக் கொண்டே, இடுப்பில் உள்ள சுருக்குப் பையைத் திறந்து புகையிலையை எடுத்துக் கொடுத்து விட்டுப் போவாள்.

அம்மாக்கண்ணுவுக்குக் கொஞ்சம் சினிமாப் பயித்தியமும் உண்டு. மலையாளத்தார் டீக் கடை மீது வாரா வாரம் சினிமா விளம்பர போர்டுகள் கொண்டு வந்து வைப்பதைப் பார்த்துக் கொண்டே இருப்பாள். அதற்காக மலையாளத்தாருக்கு 'போர்டு பாஸ்'(3) வரும் என்பதும் அவளுக்குத் தெரியும்.

''இன்னா மலையாளம்! வாத்தியார் படம் வந்துக்குதாமே... ஒரு பாஸ் குடேன், பாத்துட்டு வரேன்'' என்று கேட்டு வாங்கிக்கொண்டு போய்ப் படம் பார்த்துவிட்டு வந்துவிடுவாள்!

[ நன்றி: விகடன்  ]

பேமானி(1) : நாணயமற்றவன். மூலம் உருது என்பர்.

நாஷ்டா(2) : ஹிந்தியில் ‘சிற்றுண்டி’ !

போர்டு பாஸ்'(3) : போர்டு பாஸ் என்றால் என்ன தெரியுமா? அது ஓர் இலவச பாஸ்.  சாவி தன் வாழ்க்கையில் ‘போர்டு பாஸ்’ மூலம் நிறைய திரைப் படங்களைப் பார்த்திருக்கிறார்! இதோ, அதைப் பற்றி ராணி மைந்தனின் வார்த்தைகளில் படியுங்கள்! [ நன்றி:  நூல் “சாவி 85” ]

வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை உயர்நிலைப் பள்ளியில் அப்போது ஆசிரியராக இருந்த ராமநாதன் என்பவருக்கும் விசுவநாதனைப் ( சாவி) போலவே விளம்பர போர்டுகளின் மீது தீராத காதல் இருந்தது. போர்டுகள் எழுதுவதில் அவர் வல்லவராகவும் இருந்தார்.

விசுவநாதனின் போர்டு எழுதும் ஆசை, ஏற்கனவே ராமநாதனுடன் இருந்த நெருக்கத்தை மேலும் அதிகமாக்கியது. அந்த நெருக்கம் இரண்டு பேருமே ஒன்றாக இணைந்து போர்டு எழுதும் தொழிலை மேற்கொள்ளும் அளவுக்கு வளர்ந்தது. பகல் நேரங்களில் ராமநாதன் சுற்றி அலைந்து 'ஆர்டர்' பிடித்து வருவார். இரவு நேரங்களில் அவருக்குக் கூடமாட ஒத்தாசை செய்வது விசுவநாதனுடைய வேலை.

மண்ணடி ராமசாமி தெருவில், ஒரு மொட்டை மாடியில் இவர்களின் 'விளம்பர நிறுவனம்' செயல்பட்டது. விசுவநாதனுக்கு இந்தத் தொழிலின் மூலம் அவ்வப்போது கொஞ்சம் வருமானம் கிடைக்கும். அதில் ஒரு பகுதி சிற்றுண்டிக்கும், இன்னொரு பகுதி சினிமாவுக்கும் செலவாகிவிடும். சின்ன வயதிலிருந்தே சினிமா பார்க்கும் வழக்கம் விசுவநாதனுக்கு அதிகம் இருந்தது. கூத்து பார்த்த கண்கள் ஆயிற்றே!

அப்போது செலக்ட் தியேட்டர் சென்னையில் ரொம்பவும் பிரசித்தம். அதன் முதலாளி பட்டேல் என்பவருக்குச் சொந்தமாக சாகர் டாக்கீஸ் என்று இன்னொரு தியேட்டரும் இருந்தது. விசுவநாதனும் ராமநாதனும் அவரை சிநேகம் பிடித்துக் கொண்டார்கள். தியேட்டரில் ஓடும் படங்களுக்கான விளம்பரத் தட்டிகள் வைப்பது, போஸ்டர்கள் ஒட்டுவது போன்ற வேலைகளை விசுவநாதன் விரும்பிச் செய்ததற்குக் காரணம்: போர்டு பாஸ்!

அப்போதெல்லாம் 'போர்டு பாஸ்' என்று ஒரு இலவச பாஸ் கொடுப்பார்கள். அது வைத்திருந்தால் இலவசமாக சினிமா பார்க்கலாம். ஆக, செலக்ட் தியேட்டரிலும் சாகர் தியேட்டரிலும் ஓடும் எல்லாப் படங்களையும் இருவரும் பார்த்து விடுவார்கள். இப்படியே மற்ற தியேட்டர்களோடும் தொடர்பு கொண்டு எல்லா பெரிய தியேட்டர்களிலும் விசுவநாதன் 'போர்டு பாஸ்' வாங்கியது பெரிய சாதனை. “

தொடர்புள்ள பதிவுகள்:

சாவியின் படைப்புகள்

3 கருத்துகள்:

Muthu சொன்னது…

சென்னைத் தமிழ் (?) அம்மாக்கண்ணு வாயில் சரளமாக வருகிறது! சென்னைத் தமிழ் பழக்கம் இல்லாதவர்களுக்கு இன்னும் பல சொற்களுக்கு விளக்கம் வேண்டியிருக்கும்: கட்டை தொட்டி = விறகு கடை; கய்தே = கழுதை;

இராய செல்லப்பா சொன்னது…

தமிழ் பத்திரிகை உலகின் ஜாம்பவான் 'சாவி' அவர்களைப் பற்றி இன்னும் எவ்வளவோ எழுதலாம். எழுதுங்கள்.

Unknown சொன்னது…

வாத்தியார் படம் வந்துக்குதாமே... ஒரு பாஸ் குடேன், பாத்துட்டு வரேன்'' Not in the original version. It was Sivaji Padam in the original version.