செவ்வாய், 17 மே, 2016

திருப்புகழ் - 11

வள்ளி மணவாளப் பெருமாள்
குருஜி ஏ.எஸ்.ராகவன் 


மே 17. ’திருப்புகழ்’ குருஜி ராகவனின் நினைவு தினம். அவர் 

கல்கி’யில் 2002இல் எழுதிய  இன்னொரு கட்டுரை இதோ! ( அவர் எழுதிய மற்ற கட்டுரைகளின் சுட்டிகளைத் தொடர்புள்ள பதிவுகள் என்ற கடைசிப் பகுதியில் பார்க்கலாம்.) 

========




இன்று திருப்புகழ், கச்சேரி மேடைகளில்  ஆர்வத்தோடு பாடப் பெறுகிறது. திருப்புகழ் பாக்களடங்கிய தனிக் கச்சேரிகள் கூட நடக்கின்றன. சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் திருப்புகழ் இசை விழாவே நடக்கிறது. பிரவசன மேடைகளிலும் கலை _ இலக்கிய விழாக்களிலும் திருப்புகழ் விளக்கமும் ஆய்வுகளும் நிகழ்த்தப்பட்டு தத்துவ முத்துக்களும் மொழி நயங்களும் வரிசைப்படுத்தப்படுகின்றன.

  அருணகிரிநாதர் அருளிய பாக்கள் இந்த கீர்த்தியை அடைவதற்குக் காரணமாய் இருந்தவர் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள். வள்ளிமலை என்று சொன்னதுமே ‘திருப்புகழ்சுவாமிகள்’ என்ற அடைமொழியைப் பெற்ற இவர் ஞாபகம்தான் வரும்!

  வள்ளிமலை திருத்தல வரலாறைப் பார்க்கும் முன் சுவாமிகளின் அதிசய வாழ்க்கை வரலாறைச் சற்றுப் பார்ப்போம்.


  சிதம்பர ஐயர் என்பவரது மகனாகப் பிறந்த சுவாமிகளுக்குப் பூர்வாசிரமப் பெயர் அர்த்தநாரி. திருச்செங்கோடு அர்த்த நாரீசுவர பிரானை வேண்டிப் பெற்ற பிள்ளை என்பதால் அப்பெயர். சமையல் பணியாளராக வாழ்க்கையைத் தொடங்கி ஒரு சிறுவனிடம் தமிழ் பயின்று திருப்புகழ் பாக்களுடன் உறவாட ஆரம்பித்தார். திருவண்ணாமலை சென்றபோது ரமண மஹரிஷியின் அனுக்கிரஹமும் சேஷாத்ரி சுவாமிகளின் வழிகாட்டலும் பெற்றவர். அந்த வழிகாட்டல்படி வள்ளிமலை சென்று வள்ளியின் அருளால் இசை ஞானமும் பெற்று திருப்புகழ் பாக்களைப் பாட ஆரம்பித்தார். அந்தக் காலத்திலேயே திருப்புகழ் கான சபைகளை நாடு முழுவதும் நிறுவினார் இந்த எளியவர் என்று அறிய பிரமிப்பு ஏற்படுகிறது.

  காம விஷயங்களைச் சொல்வதாகக் கருதி அதுநாள் வரை திருப்புகழை ஒதுக்கி வைத்திருந்தார்கள். ஆனால், உண்மையில் காமத்தின் கேடுகளையே திருப்புகழ் பாக்கள் விளக்கின. அதிலும் சமுதாய அவலத்தைத் தனது சொந்த அவலம்போல் ஏற்றுப் பாடும் மரபில்தான் அருணகிரியார் அவ்வாறு பாடியிருக்க வேண்டும். அவர் வாழ்ந்த கால கட்டத்தில் ஆண்ட அரசர்களின் போக்ய வாழ்க்கையை பிரபுக்கள் முன்னுதாரணமாகக் கொள்ள ஆரம்பித்தார்கள். அவர்கள் வாழ்வைப் பார்த்து எளிய மக்களும் திசைகெட்டுத் திரிய ஆரம்பித்தார்கள். இதைக் கண்டு பொறாமல்தான் அருணகிரிநாதர் திருப்புகழில் சில விவரங்களைப் பாடியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்களிடையே ஒரு கருத்து உண்டு.


  திருப்புகழின் பக்தி நெறியை உணர்ந்து, வேதாந்த கருத்தைத் தெளிந்து அதனை உலகம் போற்றும் சமய இலக்கியமாகவும் இசை வழிபாடாகவும் ஆக்கினார் சுவாமிகள். இத்தனைக்கும் இவர் அகண்ட கல்வியறிவோ ஆழ்ந்த மொழிப்புலமையோ உடையவர் அல்ல. எனினும் திருப்புகழ் ஒலிக்கு மந்திராக்ஷரங்களின் வலிமை உண்டு என்று வகுத்துக் கூறுகிற அளவுக்கு அதில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

  வள்ளிமலை வரலாறுக்கு வருவோம்...

  இத்தலத்தில்தான் முருகன் வள்ளிக் குறத்தியை மணம் செய்து கொண்டான் என்கிறது புராணம். இந்தப் பெருமைக்குப் போட்டி போடுகிற வேறு சில ஊர்களும் இருந்தாலும் அதிக வாக்குகள் பெற்று ஜெயிப்பது வள்ளி மலைதான்! இங்குதான் வள்ளி மஞ்சள் அரைத்துக் குளித்தாள்; இந்தச் சுனையில்தான் தேனும் தினைமாவும் கலந்து உண்டனர் கந்தனும் வள்ளியும்; இதோ _ காலடிச் சுவடுகள் _ இவை அந்த தெய்வ தம்பதியுடையவை; அதோ _ அங்கே ஒரு குன்று தெரிகிறதே, அதுதான் கணேசகிரி. அவ்விடத்தில் தான் வள்ளியைப் பயமுறுத்த வினாயகர் யானை உருவெடுத்து வந்தார்; மிரண்டு போன வள்ளி, கிழத் தோற்றத்தில் இருந்த கந்தனை நெருங்கி இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள் _ இப்படி வள்ளிமலையில் திரும்பிய திசைகளெல்லாம் கதைகள்!

  இந்த வள்ளி ஒரு வகையில் முருகனுக்கு மாமன் மகள்! திருமாலின் இரு கண்களிலிருந்தும் தோன்றிய இரு பெண்கள் சுந்தரவல்லி, அமிர்தவல்லி. இவ்விருவருமே முருகனை அடைய வேண்டும் என்று தவமிருந்தனர். முருகனும் அவர்களுடைய தவத்துக்கு இறங்கி, தக்க சமயத்தில் வந்து ஆட்கொள்வதாக வாக்களித்தான். அமிர்தவல்லி, இந்திரன் மகள் தேவ சேனையாகப் பிறந்து முருகனைத் திருப்பரங்குன்றத்தில் மணந்தாள். அந்த வல்லிதான் வள்ளி மலையில் வேடனாகப் பிறந்த வள்ளி சுந்தரி!

  வள்ளி படர்கின்ற வள்ளிமலை சென்று  
   வள்ளியை மணந்த பெருமாளே’

  என்று அருணகிரிநாதர் பாடல் பிரமாணமாக இருக்கிறது.

  வள்ளி _ தெய்வயானையரை முருகன் மணந்தது இருதார மணத்துக்கு அங்கீகாரம் தெரிவிப்பதாக நவீன குதர்க்கங்கள் எழுந்துள்ளன. கடவுளர் கதைகளின் பின் உள்ள தத்துவங்கள்தான் முக்கியமானவை. _ மாசு மருவற்ற அடியவர்களாயிருப்பின், அவர்கள் இருப்பிடத்துக்கே தேடிச் சென்று திருவிளையாடல் புரிந்து ஆட்கொள்வான் இறைவன் என்பதற்கான அழகான உதாரணம் வள்ளி _ முருகன் திருமண வரலாறு. அவ்வாறு அவன் தேடி வந்துள்ளதை உணராமல், மாயையில் கட்டுண்டு மறுத்து, மோடி செய்யும் அசட்டு பக்தனின் சித்திரிப்புத்தான் வள்ளி! முருகனிடத்தில் அவள் கொண்ட அன்பின் மிகுதியே அவள் கண்களை மறைக்கிறது! முருகனோ அந்த நிறையன்பின் உயர்வுக்குப் பணியும் தெய்வாம்சத்தின் உருவகம். வள்ளியின் அடி பணிந்து கெஞ்சவும் அவன் தயார்!

  தெய்வீகக் காதல் வரலாற்றுத் தலமான வள்ளிமலை அரக்கோணத்திலிருந்து நாற்பத்தைந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. அடிவாரத்திலும் மலை மேலும் முருகன் கோயில்கள் இருக்கின்றன. சரவண பொய்கையைக் கடந்து அடி வாரக் கோயிலை அடைகிறோம்.

  ‘மயலொடு இருபுறம் இருமாதர் மருவ’ ஆறுமுகப் பெருமான் நிற்கிறான்! கிழக்கு நோக்கிய பிராகாரம்.


  வணங்கித் துதித்து விட்டு படிகள் ஏறி மலைச் சிகரத்துக் கோயிலுக்குப் போகிறோம். ஒரே பாறையில் படிகள் அமைந்துள்ளன. குடைவரைக் கோயில். கடைசிப் படியைத் தொடுகையில் இடது பக்கம் திறந்த வெளியில் துவஜஸ்தம்பம் வலப்புறம் பாறைகள் தொடர்ந்து நீடிக்கின்றன. துவஜஸ்தம்பத்தை வலம் வந்து குடை வரை மண்டபத்தை அடைகிறோம். அங்கே... இரு கைகளிலும் கவண், கல் ஏந்தி, தினைப் புனம் காக்கும் கோலத்தில் வள்ளி நம்மை வரவேற்கிறாள் _ பாறைச் சுவரில் செதுக்கப்பட்ட சிற்பச் சித்திரமாக. தொடர்ந்து, வினாயகர், அருணகிரியார்; வீரபத்ரர், நவவீரர்கள் என்று தரிசித்துக் கொண்டே போகிறோம். ஒரு சிறு மண்டபத்தில் காசி விச்வநாதர், விசாலாக்ஷி இருக்கின்றனர், சற்றே மேல் நிலை _ இரு படிகள் ஏறினால் மூலஸ்தானம். ஒரு திருமுகமும் இரு கரங்களும் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் அபயவரதமுடன் தென்திசை நோக்கி வள்ளி _ தேவ சேனையுடன் வீற்றிருக்கிறான். ‘வள்ளியை மணம் புணர வந்த முகம்’ தனிப் பெருமிதத்துடன் ஜொலிப்பதாக நம் சிந்தைக்கும் கற்பனைக்கும் தோன்றுகிறது.

  சன்னதிக்கு நேர் எதிரே ஒரு சதுர ஜன்னல் போன்ற அமைப்பு காணப்படுகிறது. அதன் பின்னே ஒரு குகை இருக்கிறது என்கிறார்கள். அங்குதான் முருகன், வள்ளியைக் களவு கொண்டு போனான் என்கிறார்கள்.

  மலையின் அமைப்பே ஓம்கார வடிவமாக இருக்கிறது. வலம் வந்து வலதுபுறம் பிரியும் பாதை வழியே சென்றால், எல்லோரும் திருப்புகழ் பாடவேண்டும் என்று பாடுபட்ட வள்ளிமலை சுவாமிகளின் ஆசிரமத்தை அடையலாம். அவரது திருவுருவச் சிலை, சமாதி இரண்டும் உள்ளன.

அருகேயுள்ள குகையில், முருகன் வள்ளியை கந்தர்வ மணம் செய்து கொண்டதாகச் சொல்கிறார்கள். சுற்றிலும் வேறு பல குகைகள் இருக்கின்றன.

  நான்கு கால பூஜைகளுடன் கோலாகலமாக இருக்கிறது கோயில். மலர்க்காவடி பிரார்த்தனை இத் தலத்தில் விசேஷம். தமிழ்ப் புத்தாண்டுதோறும் திருப்புகழ் திருப்படி விழா நடைபெறுகிறது. வள்ளிக்கு மஞ்சள் காப்பு சார்த்துவதும், முருகன் சன்னிதியில் சடாரி சாதித்து தீர்த்தம் வழங்குவதும் தனிச் சிறப்புகள்.


  ‘வேடர்பறி’ என்ற விழா இக்கோயிலில் மலையடிவாரத்தில் நடைபெறுகிறது. மயில் வீரன் முருகன் குதிரை வீரனாக மாறுகிறான்! வள்ளியைத் தன் குதிரை வாகனத்தில் ஏற்றி அபகரித்துச் சென்று அன்புச் சிறைக்குள் பூட்டி வைக்கிறான்! சுற்றியுள்ள மக்கள் வேடர்குலத்தவராக மாறி, முருகனிடமிருந்து வள்ளியை மீட்கப் போர் செய்து தோற்றுப் போகிறார்கள்!

  பிறகு, தாங்களே தேனும் தினைமாவும் புத்தாடைகளும் ஸ்ரீதனமாக்கி இருவருக்கும் மணம் முடித்து வைக்கிறார்கள்.

  இந்த உலகியல் நாடகங்களுக்கெல்லாம் உவப்புடன் தன்னை உட்படுத்திக் கொண்டு, உலகாளும் முருகன் மாறாத சிரிப்புடன் காட்சி தருவது பார்த்து பார்த்து வியக்கத்தக்க காட்சி.

  இந்தத் திருமணம் எதை உணர்த்துகிறது என்று அருணகிரிநாதர் மிக அழகாகச் சொல்லிவைத்திருக்கிறார்:

  ‘‘கின்னங் குறித்தடி யேன்செவி நீயன்று கேட்கச்சொன்ன 
   குன்னங் குறிச்சி வெளியாக்கி விட்டது கோடுகுழல் 
  சின்னங் குறிக்க குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை 
   முன்னங் குறிச்சியிற் சென்றுகல் யாண முயன்றவனே.’’

  ‘யாரொருவர் யான், எனது எனும் ஆணவ நிலை அற்று என்னை வழிபடுகிறார்களோ, அவர்களிடம் நான் வலியச் சென்று அவர்களுக்குக் குற்றேவல் புரிந்து என்னிடம் சேர்த்துக் கொள்வேன்’’ என்று எனக்கு ரகசியமாக உபதேசித்ததை இந்தக் குறிஞ்சிநில ஊராகிய வள்ளிமலை பகிரங்கமாக வெளிப்படுத்தி விட்டது!’

  புலவர் சு. சுந்தரேசன் என்பவர் பாடியுள்ள வள்ளிமலை திருமுருகன் பிள்ளைத் தமிழ், வள்ளிக்குக் கிடைத்த நிலைவாழ்வு நமக்கும் கிடைக்க வேண்டும் என்று எத்தனை எளிமையுடன் பிரார்த்திக்கிறது பாருங்கள்:

  நிலையான வாழ்வினை நிதியான பேற்றினை 
    நிறைவான தன்மனத்தை 
  நிலமீது பெரியரைப் போற்றிடும் பண்பினை 
    நெறியான நல்லொழுக்கை 
  உலையாத பொருளினை உறுதியாம் அறிவினை  
    உயர்வான ஞானமதை 
  உத்தம பக்தியை உன்கழல் நிழலினை 
    ஒருமையின் துதிப்பவர்க்கே 
  சந்ததம் அளித்திடும் சண்முகக் கடவுளே 
    தனிப்பெருங் கருணையமுதே 
  சிலையான வன்மணச் சூரனைச் சிதைத்தவா 
    செங்கீரை யாடியருளே 
  திருமகள் செல்விவளர் வள்ளிமலை முருகனே 
    செங்கீரை யாடியருளே. 

[ நன்றி: கல்கி ]


2 கருத்துகள்:

ananth சொன்னது…

குருஜி ராகவனின் நினைவை அவரது கட்டுரை வழியே வழிபட வாய்ப்புத் தந்தமைக்கு நன்றி.

அனந்த்
பி.கு. இறுதியில் தந்துள்ள திருமுருகன் பிள்ளைத்தமிழ்ப் பாடலில், மூன்றாவ்து அடியின் முதல் அரையடி பதிவாகவில்லை.

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி, அனந்த்.

ஆம், கல்கி மூலக் கட்டுரையிலேயே அந்த அரையடி விட்டுப் போயிருந்தது.

இக்கட்டுரைகள் பின்னர் நூல் வடிவில் வந்தன. அப்போது அந்தப் பாடல் முழுதும் அதில் இருந்திருக்கக் கூடும். ( என்னிடம் அந்த நூல் இல்லை. வானதி பதிப்பகம் வெளியிட்ட நூல். அந்நூல் வைத்திருப்பவர் யாரெனும் அதைச் சொன்னால் என் பதிவில் சரி செய்ய முடியும்!)