திங்கள், 9 மே, 2016

நாமக்கல் கவிஞர் -1

கோபால கிருஷ்ண கோகலே
நாமக்கல் கவிஞர் 

மே 9.   கோபால கிருஷ்ண கோகலேயின் பிறந்த தினம்





‘காந்தியக் கவிஞர், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்கள் கோகலே பற்றிப் பாடிய பாடல் இதோ! 


======
படிப்பெனும் கடலை நீந்திப்
     பணமெனும் ஆசை போக்கிக்
கடிப்புடன் மமதை யென்னும்
     களையிலா தொழுகி நின்று
துடிப்புடன் இந்து தேசத்
     தொண்டனாம் தலைமை பூண்டு
கொடிப்படை யில்லா தாண்டான்
     கோகலே என்னும் வேந்தன்.

ஜாதிமத பேதமெல்லாம் கடந்து நின்றான்
     தனிப்பெரிய குலத்துதித்த தகைமை யுள்ளோன்
மேதினியில் உடன்பிறந்த உயிர்க ளெல்லாம்
     மெலிவின்றிப் பசிநீங்கிக் களிப்ப தொன்றே
ஊதியமாம் எனக்கருதி உழைப்ப தற்கே
     உடலோடு பொருளாவி உதவி நின்றான்
கோதிலான் கோபால கிருஷ்ண னெங்கள்
     கோகலே அவன்பெருமை கூறப் போமோ”

தன்சுகமாம் தன்னாட்டார் சுகமே யென்றும்
     தன்னறிவாம் தன்னாட்டார் அறிவே யென்றும்
தன்பெருமை தன்னாட்டார் பெருமை யென்றும்
     தன்சிறுமை தன்னாட்டார் சிறுமை யென்றும்
மன்பெரிய சபைதனிலும் மறவா னாகி
     மலைபோல நிலையாகப் பாடுபட்டான்
என்சொலுவோம் கோகலே பெருமை தன்னை 
     இறந்தாலும் இறவாதான் இவனே யாவான்.

தருமமும் கருமமெல்லாம் தனித்தனி மறந்து மிக்க 
     தரித்திரம் பிணிகளெல்லாம் தங்கியே இங்கு நிற்கப் 
பெருநிலக் கிழவியிந்த பேதையாம் இந்து தேசம்
     பலபல துன்பமுற்றுப் பஞ்சையாய் வாடிநிற்க 
வெறுமனே யிருந்துநாங்கள் வீணரா யலைந்து கெட்டோம்
     வேண்டினோம் தேசபக்தி விமலனார் எமக்குத் தந்த
பெருமானே கோக லேநீ பின்னையும் பிறந்து வந்து
     பெற்றதாய் இந்துமாதின் பிணியெலாம் அறுத்து வைப்பாய்.

தொடர்புள்ள பதிவுகள்:


நாமக்கல் கவிஞர்

கருத்துகள் இல்லை: