சனி, 7 மே, 2016

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை - 1.1

அஞ்சலி 
கவிமணி 

மே 7. ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த தினம்.



தாகூரின் கீதாஞ்சலியின் தாக்கத்தில் கவிமணி சில பாடல்கள் இயற்றியுள்ளார். இவை நண்பர்களின் தூண்டுதலால் 1925-30 காலத்தில் எழுதப்பட்டன என்பர்.

இவற்றில் உள்ள முதல் இரண்டு பாடல்களையும், அவற்றின் ஆங்கில மூலங்களையும் இங்கே இடுகிறேன்.



என்றுமெனை அழிவிலாப் பொருளா யியற்றினை
         ஈதுனது திரு வுள்ளமே;
   ஈடற்ற கலமித கவிழ்த்திக் கவிழ்த்தியுயிர்
        ஏனோ திருத்தி வைப்பாய்?
குன்றினொடு குழியெலாம் இச்சிறிய வேயின்வரு
        குழல் கொண்டு சென்ற நீயுன்
  குமுதவாய் வைத்துநவ நவமான இசைகள் செவி
        குளிரவே ஊதி நிற்பாய்;
பொன்றுத லிலாதநிலை தரவல்ல உன்கரப்
        புனிதமுடல் தீண்ட லாலே,
  பூரித்த உள்ளமகி ழெல்லையற மாய்ந்ததும்,
       போற்றமொழி யற்று நின்றேன்;
நன்றுதவு கொடைகோடி இக்குழவி கைகளில்
       நாளும்நீ அள்ளி யிடினும்,
  நான்குறைகள் சொல்லி அருள் வேண்டா திருந்திடேன்,
       ஞானஒளி வீசி மதியே!

தாகூரின் மூலம்: ( கீதாஞ்சலியில் முதல் பாடல்.  தாகூரே தன் வங்க மொழிப் பாடலிலிருந்து மொழிபெயர்த்தது.)




பண்ணொழுகு பாடலைப் பாடென் றெனக்குமருள்

       பாலிக்கும்வேளை, இந்தப்

  பாரெங்கும் அறியாத கர்வமது பொங்கிப்

       பரந்துளம் விம்ம நிற்பேன்;

அண்ணலுன் திருமுகம் நோக்கிநிற்பேன்; விழிகள்

       அருவிநீர் பாய நிற்பேன்;

  ஆகாத குணமெலாம் அடியோடு நீங்கநல்

       அமுதகுணம் ஓங்க நிற்பேன்;

எண்ணரிய ஆழியைத்தாண்டுபுள்போல் அன்பும்

       இறகினை விரிக்கும், அதனால்

  ஏத்தியிசை பாடத் தொடங்குவேன்; நீயும் அதில்

       இன்புறுவை என்ப துணர்வேன்;

நண்ணுதற் கானவழி வேறெதுங் கண்டிலேன்;

       நானுமென் களிம யக்கால்,

  நண்பனென் றேயழைக் கின்றனன்; என்னையாள்

       நாதனே! ஞான பரனே! 



தொடர்புள்ள பதிவு:

தாகூர்
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

கருத்துகள் இல்லை: