ஞாயிறு, 23 அக்டோபர், 2016

பாடலும், படமும் - 14

அரவத்திற்கு அபயமளித்த அரி


பதிப்பகைஞர்க் காற்றாது பாய்திரைநீர்ப் பாழி,
மதித்தடைந்த வாளரவந் தன்னை,- மதித்தவன்றன்
வல்லாகத் தேற்றிய மாமேனி மாயவனை,
அல்லாதொன் றேத்தாதென் நா.
              ( நான்முகன் திருவந்தாதி – திருமழிசை ஆழ்வார் )

பொழிப்புரை:  தன் இயல்பான எதிரியான கருடனுக்கு அஞ்சி, பாயும் அலைகளோடு கூடிய நீருடைய கடல்போலே குளிர்ந்த திருப்படுக்கையைப் புகலிடமாக நம்பி வந்து பற்றின ஒளிபொருந்திய பாம்பாகிய சுமுகனை  ஆதரித்து, அந்த ( எதிரியான) கருடனுடைய வலிமை பொருந்திய உடலிலே ஏறவிட்டவனும், சிறந்த திவ்ய மேனியுடையவனான சர்வேஸ்வரனை அன்றி வேறொருவரை என் நா துதி செய்யாது.

கருடனுக்கு அஞ்சிவந்து அடிபணிந்த சுமுகன் என்ற பாம்பிற்கு விஷ்ணு அபயமளித்த வரலாறு இப்பாடலில் சொல்லப் படுகிறது .

திருமால் இந்திரனின் தம்பி, உபேந்திரனாய் அவதரித்தபோது நடந்த சம்பவம் இது. கருடன் அவருக்கு வாகனமாய் இருந்தான். இந்திரனின் தேர்ச்சாரதி, மாதலி, தன் மகளைச் சுமுகன் என்ற நாகலோக இளவரசனுக்குத் திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். பாம்பினத்திற்கு எதிரியான கருடனுக்குச் சுமுகன் இரையாவானோ என்று பயந்து, மாதலி இந்திரனின் உதவியை நாடினான். இந்திரன் சுமுகனுக்கு நீண்ட ஆயுள் கிட்ட ஆசீர்வதித்தான். கருடன், திருமாலின் வாகனம் என்ற பெருமையில் சிறிது கர்வம் அடைந்திருந்த தருணம் அது. தன் இயல்பான இரையான ஒரு பாம்பைத் தன்னுணவாகக் கொள்ளவிடாமல் தடுப்பதை ஆட்சேபித்தான். மேலும் திருமாலுக்கே சவாலாய், திருமால் வல்லவரா? அல்லது திருமாலையே தாங்கும் தான் வல்லவனா? என்று வினவினான் கருடன். விஷ்ணு அப்போது தன் வலது கையைக் கருடன் மேல் வைத்து, அந்த பாரத்தைத் தூக்கச் சொன்னார். அந்த எடையைத் தாங்கமுடியாமல் தவித்த கருடன் விஷ்ணுவின் மன்னிப்பைக் கோரினான். இச்சமயத்தில், கருடனுக்கு அஞ்சின சுமுகன் பாம்பின் வடிவத்தில் விஷ்ணுவின் அடியில் சரணடைந்திருந்தான். விஷ்ணு சுமுகனைக் கருடனின் உடலில் ஏற்றிவிட்டு, கருடனைச் சுமுகனுடன் நட்புடன் இருக்கப் பணித்தார். கருடனும் அப்படியே நடந்து கொண்டான்.   

இந்தச் சம்பவத்தை அழகாக ஓவியத்தில் வடித்துள்ளார் வினு.


[ நன்றி: கல்கி தீபாவளி மலர், 1970 ; http://www.indian-heritage.org/  ] 

தொடர்புள்ள பதிவுகள்:

கருத்துகள் இல்லை: