புதன், 30 நவம்பர், 2016

மார்க் ட்வைன் - 1



நவம்பர் 30. மார்க் ட்வைனின் பிறந்தநாள்.

அவர் வாழ்க்கையில் இரு நிகழ்ச்சிகள்:
================ 
1. மற்றொருவர் ங்கே?


முல்லை பிஎல். முத்தையா

பிரபல நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் ஒரு நாள் குதிரைப் பந்தயத்துக்குப் போயிருந்தார்.

அங்கே அவருடைய நண்பர் ஒருவரைச் சந்தித்தார். நண்பர் அவரைப் பார்த்ததும், பரபரப்போடு, “கையில் இருந்ததையெல்லாம் தோற்றுவிட்டேன். ஊருக்குத் திரும்பிப் போக ஒரு டிக்கெட் வாங்கித் தர இயலுமா?” என்று கேட்டார்.

"நான் கூடத்தான் இன்று எவ்வளவோ தோற்று விட்டேன். எனக்கும் உனக்குமாக இரண்டு டிக்கெட் வாங்க இயலாது. ஒன்று செய்யலாம். நான் உட்கார்ந்திருக்கும் இடத்துக்குக் கீழே நீ மறைந்து கொள்; என் காலால் உன்னை மறைத்துக் கொள்கிறேன். சம்மதமா?” என்றார் மார்க் ட்வைன்.

நண்பர் அதற்கு இணங்கினார். அவருக்குத் தெரியாமல் மார்க் ட்வைன் ரயில் நிலையத்துக்குப்போய், இரண்டு டிக்கெட் வாங்கிக் கொண்டார்.

 ரயில் வந்தது. நண்பர் மார்க் ட்வைன் இருக்கைக்குக் கீழே புகுந்து கொண்டார்.

 சிறிது நேரம் கழித்து, டிக்கெட் பரிசோதகர் வந்தார்.

மார்க் ட்வைன் அவரிடம் இரண்டு டிக்கெட்டுகளைக் காண்பித்தார்.

 'இன்னொருவர் எங்கே?" என்று கேட்டார் பரிசோதகர்.

மார்க் ட்வைன் தலையை அசைத்தவாறு, "இது என் நண்பருடைய டிக்கெட்! அவர் கொஞ்சம் ஒரு மாதிரி! இருக்கைக்கு அடியில் உட்கார்ந்து வருவதே அவர் வழக்கம்என்று கிண்டலாகக் கூறினார்


[ நன்றி: “ அயல் நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள் “, நூல் ] 

2. டை தானே வேண்டும்?

‘அங்கிள் டாம்ஸ் கேபின்’ என்ற நூலை எழுதிப் புகழ்பெற்றவர் ‘ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்’ என்ற எழுத்தாளர். இவரைப் பார்க்க ஒரு முறை மார்க் ட்வைன் சென்றார். நகைச்சுவையாகப் பேசுவதிலும் எழுதுவதிலும் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் மார்க் ட்வைன். ஆனால் எப்போதுமே உடை விஷயத்தில் அவ்வளவு அக்கறை காட்ட மாட்டார். வெளியில் செல்வதாக இருந்தால் கூட கையில் கிடைப்பதை எடுத்து மாட்டிக் கொண்டு கிளம்பி விடுவார். 

மார்க் ட்வைன், ஸ்டோவுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு விடைபெற்றபோது, திருமதி ஸ்டோவ், ‘‘என்ன இப்படி டை கூட அணியாமல் வெளியே கிளம்பி விடுகிறீர்கள்?’’ என்று கேட்டதும்தான் மார்க் ட்வைன் தன் கழுத்தைத் தொட்டுப் பார்த்தார்.

‘‘மறந்து விட்டது’’ என்று கூறி விட்டுச் சென்றார். சிறிது நேரத்தில் ஸ்டோவ் வீட்டுக் கதவை யாரோ தட்டினார்கள். திருமதி ஸ்டோவ் கதவைத் திறந்தபோது, வாசலில் ஒரு ஆள் கையில் ஒரு பொட்டலத்துடன் நின்று கொண்டிருந்தான். ‘‘மார்க் ட்வைன் இதைத் தங்களிடம் தரச் சொன்னார்’’ என்று சொல்லிக் கொடுத்தான்.

 திருமதி ஸ்டோவ் அதைப் பிரித்துப் பார்த்தார். உள்ளே ஒரு கறுப்பு டையும், ஒரு குறிப்பும் இருந்தன. குறிப்பில் எழுதப்பட்டு இருந்தது இதுதான்: ‘‘இதோ என் டை. இன்று உங்கள் வீட்டில் அரை மணி நேரம் நான் டையில்லாமல் இருந்தேன். 

எனவே, அரை மணி நேரம் என் டையைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, திருப்பி அனுப்பி விடுங்கள். தயவு செய்து தாமதிக்க வேண்டாம். ஏனென்றால், என்னிடம் இருப்பது ஒரே ஒரு ‘டை’தான். ‘இவரிடம் போய் வாயைக் கொடுத்தோமே’ என்று அவர் நொந்து போனார்.


[ நன்றி :http://www.kungumam.co.in/MArticalinnerdetail.aspx? id=4040&id1=30&id2=3&issue=20141208  ]

கருத்துகள் இல்லை: