திங்கள், 18 செப்டம்பர், 2017

839. லா.ச.ராமாமிருதம் -14: சிந்தா நதி - 14

11. நிர்மாலியம்
லா.ச.ராமாமிருதம்

                              



” ஏன் எதையுமே கதையாகப் பார்க்க விரும்பும் சுபாவம் நமக்கு? வாய்ச் சொல்லிலோ, ஏட்டிலோ, நினைவு கூட்டலிலோ, அனுபவம் மறு உரு எடுக்கையில் கதையாகத்தான் வருகிறது. பாஷையின் ரஸவாதம். “




சிந்தா நதிக் கரையோரம் குப்புறப் படுத்து, ஜலத்துள் எட்டிப் பார்க்கிறேன். முகங்கள், நிழல்கள், உருவங்கள். எல்லாமே தெரிந்த முகங்கள் இல்லை. அன்று என்று மறுப்பதற்கும் இல்லை. மெதுவான பவனியில் யுகம் நகர்கிறது.

திரேதா, க்ரேதா, துவாபர, கலி-காலம் ஒரு முப்பட்டகம் எனில், யுகங்கள் அதன் முகங்கள்.

"இப்படி எல்லாம் தெரிந்தமாதிரி உன் அதிகாரப் பூர்வம் என்ன?" எனக் கேட்டால்,

"தெரியாது."

முப்பட்டகத்தில் ஒரு இம்மி அசைவுக்கும் காட்சி மாறல் க்ஷண யுகம். ராமாயணம், பாரதம், பகவத்கீதை, ஷா நாமா, அம்ருத மந்தன், அராபிய இரவுகள் Iliad odyssey- இன்னும் எனக்குச் சொல்லத் தெரியாதது, எனக்கு முற்பட்டது, எனக்கு அப்பாற்பட்டது- விந்தை. அங்கும், எதிலும் நான் இருக்கிறேன்.

கதை கதையாம் காரணமாம், காரணத்தில் ஒரு தோரணமாம். ஒரே ஒரு ஊரில் ஒரு ராஜாவாம், ராஜாவுக்கு ஒரு ராணியாம், இதுவும் நதியில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

காலமெனும் முப்பட்டகத்தில் இம்மி அசைவுக்கும் க்ஷண யுகத்தில் க்ஷணமே யுகம். யுகமே முகம் எனக்காட்சி மாறியபடி இருந்துகொண்டிருக்கும் இந்த Keleidoscopeஐத் திருப்புவது யார்?

-பழைய ஆகமம், புது ஆகமம், Genesis மத்தேயு, Psalms...

-ஸரி கம பத நி வித வித கானமு வேதஸாரம்-

-யார், யார், யார் ?

எனக்கு இது ஒரு வியப்பு. ஏன் எதையுமே கதையாகப் பார்க்க விரும்பும் சுபாவம் நமக்கு? வாய்ச் சொல்லிலோ, ஏட்டிலோ, நினைவு கூட்டலிலோ, அனுபவம் மறு உரு எடுக்கையில் கதையாகத்தான் வருகிறது. பாஷையின் ரஸவாதம்.

அனுபவம், நினைவு கூட்டல், மறு உரு, கதை- வாழ்க்கையின் இன்றியமையாத அம்சங்களாகத் திகழ்கின்றன.

அனுபவத்தில் என்னைக் கண்டு பயப்படுகிறேன்.

கதையெனும் மறு உருவில் என்மேல் ஆசை கொள்கிறேன்.

பாஷையின் ரஸவாதம்.

அனுபவத்தில் நான் என் பேதைமைகளுடன் அம்மணம். கதையில் நான் நாயகன்.

-ராமன், அர்ச்சுனன், அபிமன்யு, அலெக்சாண்டர், ரஸ்டம், ஸோரப், பீஷ்மன், பிருத்விராஜ் இவர்களைப் போல் நான் இருக்க விரும்பும் ஆசையில், திரும்பத் திரும்ப இவர்களை நினைவு கூட்டலினாலேயே இவர்களாக மாறி விட்டதாக ஆசையின் நிச்சயத்தில், இவர்கள் அனைவரிலும் இனிமேலவரிலும் எனக்கு என் பங்கு உண்டு.

திரும்பத் திரும்ப இந்த நினைவு கூட்டலில், கால அளவில் கூட்டலின் திரட்சியில் ஏதேனும் ஒரு சமயம் திரட்சியின் சிதறலில் நான் ஒரு சிதறாக இவர்களுடன் அமரத்துவம் எய்திடுவேன். நாயக பாவத்தின் பதவி அப்படிப்பட்டது. நாயக பாவமில்லாவிடின், அதன் தனித்தனி விதத் தடங்களில் தெய்வங்கள் ஏது? தெய்வங்கள் வேண்டும். தெய்வீகம் அறியோம்.

தெய்வீகம்: முக்தியின் வெட்ட வெளி. தெய்வங்கள் எனும் உச்சத்தடக் கதாநாயகர்கள் உருவாகும், உருவாக்கும் பட்டறை. அனுபவம், பாஷை, நினைவு கூட்டலின் முக்கூடல், முக்கூடலின் ரஸாயனத்தில் நேர்ந்த பூகம்பத்தின் சித்தி.

கதை கதையாம் காரணமாம்..........

நினைவு கூட்டல், திரும்ப நினைவு கூட்டல், நினைவு கூட்டலே, உன் மறு பெயர் தியானம். கதை, கற்பனை. inspiration. நடப்பு வெளி உலகம், உள் உலகம், இனி உலகம், கலை, காலம், முகம்- இன்னும் சொல்ல விட்டவை அனைத்தையும் அகப்பை அகப்பையாகச் சொரிந்து, தியானத்தின் தீராப் பசிக்குத் தீனி தியானமெனும் தீ, ஸர்வ கபளீகரி,
* * *

நினைவில் தீ நடுவில் அமர்ந்தேன்.

வெல்லத்தைக் காய்ச்சக் காய்ச்சப் பாகாய்க் கெட்டிப் படுகிறது.

சாந்தைக் கூட்டக் கூட்டச் சாந்து கெட்டிப்படுகிறது.

நினைவைக் கூட்டக் கூட்ட நினைவு இறுகுகிறது.

மறு உருவங்கள், மறு மறு உருக்கள் உருகி உருகி, இறுக இறுக ஒரு உருவாகி ஒரே உருவாகிக் கொண்டிருக்கும் பாகின் த்ரில்- பிந்து ஸாரம், பிந்து மகிழ்ச்சி, ராகம் பிந்துமாலினி.

இருளில் கன்னத்தில் ஒரு முத்தம் யார் தந்தது? அனுபவம் சொல்ல முடியாது. சொல்வதற்கில்லை, யாரிடம் சொல்வேன்? யார் முத்தம் என்று தெரிவேன்? நினைவு பித்தடிக்கிறது.
* * *

தியானமே உன் கதையென்ன? ஓ, மெளனம் உன் இயல்பல்லவா? என் பேச்சை உதவுகிறேன். எனக்காகப் பேசி உன் கதையைச் சொல்லமாட்டாயா?

"சொல்ல என்ன இருக்கிறது, நான் வேறேதுமில்லை. உன் இசையில் உன் ஈடுபாடு. ஈடுபாடில் பாகுபாடு. பாகுபாடில் இழைபாடு. இழைபாடின் வழிபாடு, இழைபாடே வழிபாடு. வழிபாடே இழைபாடு.

தியானேச்வரத்தில் நான் வஜ்ரேச்வரன் ஆனால், ஒரு நாள் ஆகையில், பிந்துமாலினி என் தியானேஸ்வரி வருவாள். இருளில் அவள் முகத்தைத் தருவாள். முத்தம் அடிக்கும் பித்தே முத்தியின் வெட்ட வெளிக்குச் சாவி. முத்தி வேண்டாம்.

தியானம் ஒரு புஷ்பம். நேற்று அவள் கூந்தலில் செருகிய மலராகி மணத்தேன். இன்று நிர்மாலியாகி, நேற்றைய நினைவின் மணத்துடன் உதிர்ந்து கொண்டிருக்கிறேன்- சிந்தா நதியில்.

"என்ன அத்தனையும் பேத்தல், வார்த்தைகளின் பம்மாத்து!"

ரொம்ப சரி. அத்தனையும் தூக்கி எறி,

சிந்தா நதியில்.
* * *
[ நன்றி: தினமணி கதிர், மதுரைத் திட்டம், ஓவியம்: உமாபதி ] 

தொடர்புள்ள பதிவுகள்:

கருத்துகள் இல்லை: