புதன், 18 அக்டோபர், 2017

874. கங்கை பொங்கணும்! : கவிதை

கங்கை பொங்கணும்!
பசுபதி


இது அம்மன் தரிசனம் 2008 தீபாவளி மலரில் வந்த கவிதை.


தீபாவ ளித்திரு நாளினிலே -- வளை
 சேர்ந்தகை கொட்டியே கும்மியடி!
கோபாலன் பேர்புகழ் பாடுங்கடி! -- இது
 கோகுல பாலனின் பண்டிகைடி!

நாட்டினர் சேர்ந்துகொண் டாடிடுவார் -- இது
 ஞான ஒளிக்கொரு பண்டிகைடி!
வீட்டில் விளக்குகள் ஏற்றிடுவோம் -- ஒளி
 மெய்ம்மையை நெஞ்சில் இருத்திடுவோம்!

ஆண்டவன் பூஜைதான் முக்யமடி! -- இன்று
 ஆடம் பரமின்றிக் கூடிடுவோம்!
யாண்டும் படர்ந்த வறுமையிருள் -- அதை
 யாவரும் சேர்ந்து விரட்டிடுவோம்!

பாவி நரகனை மாய்த்ததிலே -- சத்ய
 பாமையின் பங்கினைப் போற்றுங்கடி!
ஆவித் துணையாய் இருந்தவள்டி - அவள்
 ஆயர் மகனையே காத்தவள்டி !

பூமியில் தீமைகள் செய்திடுவோர் -- அந்தப்
 புல்லரைக் கண்டச்சம் ஏதுக்கடி?
பாமையைப் போல்தீரம் வேணுமடி! - கொடும்
 பாதகம் செய்வோரைப் பார்த்ததுமே!

காலை குளித்திடும் போதினிலே -- இன்று
 கங்கை வருவாளந் நீரினிலே!
ஞாலத்தில் வன்மை தணித்திடவே - அன்பு
 நம்முள்ளே கங்கையாய்ப் பொங்கணும்டி!

 ==========

தொடர்புள்ள பதிவுகள்:

கருத்துகள் இல்லை: