ஞாயிறு, 18 மார்ச், 2018

1014. காந்தி - 18

11. யுத்த மகாநாடு
கல்கி

கல்கி’யின்  ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( பகுதி 2) என்ற நூலில் வந்த  11-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===
முதலாவது உலக மகாயுத்தம் 1918-ஆம் வருஷத்தில் பயங்கரமான கட்டத்தை அடைந்திருந்தது. பிரிட்டன் முதலிய நேச தேசங்களின் நிலைமை மிக நெருக்கடியாகியிருந்தது. இந்த நிலைமையில் இந்தியாவின் இராஜப் பிரதிநிதி லார்ட் செம்ஸ்போர்ட் டில்லியில் ஒரு யுத்த மகாநாடு கூட்டினார். அதற்கு வரும்படி இந்தியாவின் பிரபல தலைவர்கள் பலருக்கும் அழைப்பு அனுப்பினார். மகாத்மா காந்திக்கும் அழைப்பு வந்தது. அழைப்புக் கிணங்கி காந்திஜி டில்லிக்குச் சென்றார். ஆனாலும் யுத்த மகாநாட்டில் கலந்து கொள்வது பற்றிப் பல சங்கடங்கள் அவருக்கு இருந்தன.

அச்சமயம் அலி சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட மௌலானா முகம்மதலியும், மௌலானா ஷவுகத் அலியும் சிறைப்பட்டிருந்தார்கள். காந்திஜி இந்தியாவுக்கு வந்தது முதல் ஹிந்து முஸ்லீம் ஒற்றுமைக்காகப் பாடுபட்டுக் கொண்டிருந்தார். அத்தகைய ஒற்றுமை இந்தியாவின் விடுதலைக்கும் முன்னேற்றத்துக்கும் மிக அவசியம் என்று நினைத்தார். ஆகையால் அலி சகோதரர்களை விடுதலை செய்யவேண்டிய அவசியத்தைப் பற்றி ஏற்கனவே இந்திய சர்க்காருடன் கடிதப் போக்கு வரவு நடத்திக் கொண்டிருந்தார்.

அலி சகோதரர்கள் அப்போது கிலாபத் இயக்கத்தை ஆரம்பித்திருந்தனர். முதல் உலக மகாயுத்தத்தில் துருக்கி ஜெர்மனியின் கட்சியில் சேர்ந்திருந்தது. துருக்கி சுல்தான் அகில உலகத்திலும் வசித்த முஸ்லிம்களின் மதத் தலைவராகக் கருதப்பட்டார். இதனால் 'கலீபா' என்ற பட்டப் பெயரும் துருக்கி சுல்தானுக்கு இருந்தது. யுத்தத்தில் பிரிட்டிஷ் கட்சி ஜயித்தால் முஸ்லீம் மதத்தலைவரான துருக்கி சுல்தானுடைய கௌரவத்துக்குப் பங்கம் விளையுமோ என்று இந்திய முஸ்லிம்கள் கவலை கொண்டிருந்தார்கள். அப்படி ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாக பிரிட்டன் வாக்குறுதி தரவேண்டும் என்று கோரினார்கள். இத்தகைய கிளர்ச்சியைத் தலைமை வகித்து நடத்திய காரணத்தினாலேயே அலி சகோதரர்கள் சிறைத் தண்டனை அடைந்திருந்தார்கள்.

இந்திய முஸ்லீம்களின் நட்புரிமையை மிக முக்கியமாகக் கருதிய மகாத்மா காந்தி அவர்களுடைய மத சம்பந்தமான கோரிக்கையை ஆதரிப்பது தம்முடைய கடமை என்று கருதினார். ஆகையால் அலி சகோதரர்கள் சிறைப்பட்டிருக்கும் நிலைமையில் தாம் யுத்த மகாநாட்டில் கலந்து கொள்ளலாமா என்று யோசித்தார். லோகமான்ய திலகரும் ஸ்ரீமதி பெஸண்டு அம்மையும் மேற்படி யுத்த மகாநாட்டுக்கு அழைக்கப்பட வில்லையென்று அறிந்ததும் மகாத்மாவின் தயக்கம் அதிகமாயிற்று.

இந்த நிலைமையில் பூஜ்யர் ஆண்ட்ரூஸ் இன்னும் சில ஆட்சேபங்களைக் கிளப்பினார். "அஹிம்சாவாதியாகிய தாங்கள் யுத்த மகாநாட்டில் எப்படிக் கலந்து கொள்ளலாம்?" என்பது ஓர் ஆட்சேபம். ஆனால் தென்னாப்பிரிக்காவிலேயே ஏற்பட்ட பிரச்னைதான் இது. மகாத்மா இந்த ஆட்சேபத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்திருந்தார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பாதுகாப்புக்கு உட்பட்டிருக்கிற வரையில் அந்தச் சாம்ராஜ்யத்துக்கு நேரும் அபாயங்களின்போது உதவி செய்யத்தான் வேண்டும். தாம் சொந்த முறையில் நம்பிக்கை கொண்ட அஹிம்சா தர்மத்தை இந்த விஷயத்தில் புகுத்துவது முறையன்று. ஆனால் பூஜ்யர் ஆண்ட்ரூஸ் கூறிய இன்னொரு ஆட்சேபத்துக்கு அவ்வளவு சுலபமாகப் பதில் சொல்ல முடியவில்லை. அச்சமயம் பிரிட்டனுக்கும் இத்தாலிக்கும் ஏற்பட்டிருந்த இரகசிய உடன்படிக்கைகளைப் பற்றி பிரிட்டிஷ் பத்திரிகையில் சர்ச்சை நடந்து கொண்டிருந்தது. "பிரிட்டிஷ் ராஜ தந்திரிகள் இந்தமாதிரி அக்கிரமமான காரியங்களைச் செய்துகொண்டிருக்கும் போது இந்த யுத்தத்தைத் தர்ம யுத்தம் என்று எப்படிச் சொல்லலாம்? நீங்கள் எப்படி இதற்கு உதவி செய்யலாம்?" என்று ஸ்ரீ ஆண்ட்ரூஸ் கேட்டார்.


மேற்கூறிய எல்லா ஆட்சேபங்களையும் வைஸ்ராய் செம்ஸ்போர்டிடம் நேரில் சொல்லிச் சமாதானம் கேட்பது என்ற எண்ணத்துடன் மகாத்மா டில்லிக்குப் போனார். லார்ட் செம்ஸ்போர்டை நேரில் பேட்டி கண்டு பேசினார். இரகசிய உடன்படிக்கைகள் சம்பந்தமாக லார்ட் செம்ஸ் போர்ட் கூறியதாவது:

"பிரிட்டிஷ் மந்திரி சபை செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் நான் பொறுப்பாளியல்ல. பிரிட்டிஷ் அரசாங்கம் தவறே செய்யாது என்றும் நான் சொல்லவில்லை. பொதுவாகப் பிரிட்டிஷ் சம்பந்தத்தினால் இந்தியா நன்மை அடைந்திருக்கிறது என்று நீங்கள் கருதினால் இந்த நெருக்கடியான சமயத்தில் உதவி செய்வது அவசியம். பிரிட்டிஷ் இரகசிய உடன்படிக்கைகளைப்பற்றி பத்திரிகையில் வந்திருப்பதைத் தவிர எனக்கு ஒன்றும் தெரியாது. சில சமயம் பத்திரிகைகள் கற்பனைக் கதைகளைக் கட்டிவிடுவதும் உண்டு. பத்திரிகைக் கதைகளை நம்பி நீங்கள் முக்கியமான ஒரு விஷயத்தில் முடிவு செய்யக்கூடாது. யுத்தம் முடிந்த பிறகு அரசியல் தர்மம் சம்பந்தமான உங்களுடைய பிரச்னைகளைக் கிளப்பி வாதம் செய்யலாம். இந்த நெருக்கடியான சமயத்தில் உதவி செய்ய மறுப்பது உசிதமன்று."

இவ்வாறு லார்டு செம்ஸ் போர்ட் சொன்னதினால் காந்திஜியின் மனம் ஓரளவு சமாதானம் அடைந்தது. எப்படியிருந்தாலும் யுத்த மகா நாட்டுக்குப் போவது என்று தீர்மானித்தார்.

யுத்த மகாநாட்டில் யுத்தத்துக்கு ஆள் திரட்டும் தீர்மானம் ஒன்று வந்தது. இதுதான் மகாநாட்டில் முக்கிய தீர்மானம். இதை மகாத்மா காந்தி ஆதரித்துப் பேசவேண்டும் என்று வைஸ்ராய் செம்ஸ்போர்ட் விரும்பினார். காந்திஜியும் அதற்கு இணங்கினார். ஆனால் ஹிந்துஸ்தானியில் பேசுவதற்கு அநுமதி கேட்டுப் பெற்றுக்கொண்டார். "என்னுடைய பொறுப்பைப் பூரணமாக உணர்ந்து இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கிறேன்" என்னும் ஒரே வாக்கியத்தை மகாத்மா இந்த மகா நாட்டில் சொன்னார்.

காந்திஜி ஹிந்துஸ்தானியில் பேசியது பற்றிப் பலர் அவருக்கு வாழ்த்துக் கூறினார்கள். வைஸ்ராய் பிரசன்னமாகியிருந்த ஒரு கூட்டத்தில் ஹிந்துஸ்தானியில் பேசப்பட்டது இதுதான் முதல் தடவை என்றும் சொன்னார்கள். காந்திஜிக்கு இது மிகவும் அவமானகரமாகத் தோன்றியது. இந்தியா தேசத்தில் இந்தியாவின் பாஷையில் பேசியதற்காக ஒரு பாராட்டுதலா என்று வருந்தினார்.

சைன்யத்துக்கு ஆள் திரட்டும் தீர்மானத்தை ஆதரித்து மகாத்மா ஒரு வாக்கியந்தான் பேசினார் என்றாலும் அந்தத் தீர்மானத்தைக் காரியத்தில் நடத்தி வைப்பதற்குத் தன்னால் இயன்ற முயற்சியைச் செய்யவேண்டும் என்று கருதினார். அத்தகைய முயற்சி தொடங்குவதற்கு முன்னால் தம்முடைய நிலைமையை நன்கு விளக்கி இராஜப் பிரதிநிதி செம்ஸ்போர்டுக்கு ஒரு கடிதம் வரைந்து அதை ரெவரெண்டு அயர்லாண்டு என்பவரிடம் கொடுத்தனுப்பினார்.

மேற்படி கடிதத்தின் முக்கியமான பகுதிகள் பின்வருமாறு:-

"தங்களுக்கு ஏப்ரல்மீ 26 உ ஒரு கடிதம் எழுதினேன். அதில் யுத்த மகாநாட்டில் நான் கலந்துகொள்ள முடியாமலிருப்பதற்குக் காரணங்களைத் தெரிவித்திருந்தேன். அதன் பின்னர் தாங்கள் அன்பு கூர்ந்து தங்களை நேரில் கண்டு பேச அனுமதி அளித்தீர்கள். அவ்வாறு பேசிய பின்னர், வேறு காரணம் இல்லாவிடினும், தங்களிடம் எனக்கிருந்த பெருமதிப்பை முன்னிட்டேனும் மகாநாட்டில் கலந்து கொள்வதென்று தீர்மானித்தேன். மகாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாதென்று நான் முதலில் கருதியதற்கு முக்கியமான காரணம், லோகமான்ய திலகர், ஸ்ரீமதி பெஸண்டு அம்மையார், அலி சகோதரர்கள் ஆகியவர்கள் மாநாட்டிற்கு அழைக்கப் படாததேயாகும். பொதுஜன அபிப்பிராயத்தை உருப்படுத்தக்கூடிய மிக சக்தி வாய்ந்த தலைவர்களென்று இவர்களை நான் மதித்திருக்கிறேன். இவர்களை அழையாது விட்டது பெருந் தவறு என்றே இன்னமும் நான் கருதுகிறேன். இத்தவறை நிவர்த்திப்பதற்கு வழியையும் மரியாதையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இனி, மாகாணந்தோறும் யுத்த மகாநாடுகள் நடைபெறுமெனத் தெரிகிறது. இந்த மகாநாடுகளுக்காவது வந்து அரசாங்கத்துக்கு யோசனை சொல்லி உதவுமாறு மக்களின் மதிப்புக்குப் பாத்திரமான அத்தலைவர்களை அழைக்க வேண்டும்.

சமீப காலத்தில் நாங்களும் மற்ற குடியேற்ற நாடுகளைப் போலவே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில் சம பங்காளிகளாகலாமென்னும் ஆசை கொண்டிருக்கிறோம். எனவே, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு அபாயம் வந்த காலத்தில் எவ்விதத் தயக்கமுமின்றிப் பூரண ஆதரவு அளித்தல் அவசியமென்பதை நன்குணர்ந்திருக்கிறோம். அவ்வாறே தீர்மானமும் செய்திருக் கிறோம். ஆனால் இவ்வாறு உதவி செய்ய ஆவலுடன் முன்வந்ததற்கு, அதன் மூலம் நமது இலட்சியத்தை விரைவில் அடையலாமென்னும் நம்பிக்கையே காரணம் என்பது உண்மை. கடமையைச் செய்வோன் அந்த அளவில் உரிமையும் பெறுகின்றான். ஆதலின் தங்களுடைய பிரசங்கத்தில் விரைவில் வரப்போவதாகக் குறிப்பிட்டிருக்கும் அரசியல் திருத்தங்கள் காங்கிரஸ் - லீக் திட்டத்தை முக்கிய அம்சங்களில் அனுசரித்திருக்கும் என்று எதிர் பார்ப்பதற்கு ஜனங்களுக்கு உரிமையுண்டு. இந்த நம்பிக்கையின் மேல்தான் மகாநாட்டிற்கு வந்திருந்த அங்கத்தினரில் அனேகர் தங்கள் மனப்பூர்வமான ஒத்துழைப்பை அரசாங்கத்துக்கு அளிக்க முன் வந்தார்கள்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து நான் இந்தியாவுக்குத் திரும்பியது முதல், குடியானவர்களிடம் நெருங்கிப் பழகி வந்திருக்கிறேன். அவர்களுடைய சுயராஜ்ய தாகம் நிரம்ப ஏற்பட்டிருக்கிறதென்று தங்களுக்கு உறுதி கூறுவேன். சென்ற காங்கிரஸ் மகாசபையின் கூட்டத்திற்கு நான் சென்றிருந்தேன். குறிப்பிட்ட காலத்திற்குள் பூரண சுயாட்சி பிரிட்டிஷ் இந்தியாவுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்னும் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் நானும் கலந்துகொண்டேன். திட்டமான ஒரு காலத்திற்குள் சுயாட்சி கிடைக்குமென்னும் நம்பிக்கை ஏற்பட்டால் தான் இந்திய மக்கள் திருப்தி அடைவார்களென்பது நிச்சயம்.

கடைசியாக நான் தங்களைக் கேட்டுக் கொள்ளுவது என்னவென்றால், முஸ்லிம் ராஜ்யங்களைப் பற்றி பிரிட்டிஷ் மந்திரிகள் திட்டமான வாக்குறுதி யளிக்குமாறு தாங்கள் செய்ய வேண்டும். ஒவ்வொரு முஸ்லிமும் இவ்விஷயத்தில் பெரிதும் சிரத்தை கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள். ஆதலின் ஹிந்துவாகிய நான் இவ்விஷயத்தில் அசட்டை காட்டக்கூடாது. அவர்களுடைய துக்கங்களை எங்களுடைய துக்கங்களாகவே கருத வேண்டும். முஸ்லிம் ராஜ்யங்களின் உரிமைகளைக் காப்பது முஸ்லிம் புண்ணிய க்ஷேத்திரங்களின் விஷயத்தில் அவர்கள் உணர்ச்சியை மதிப்பது; இந்தியாவின் சுயாட்சிக் கோரிக்கையைக் காலா காலத்தில் நியாயமான முறையில் நிறைவேற்றி வைப்பது; இவைகள்தான் சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமான சாதனங்களாகும். ஆங்கில மக்களை நான் நேசிக்கிறபடியாலும் ஆங்கிலேயர்களுடைய ராஜ பக்தியை ஒவ்வொரு இந்தியரிடத்தும் உண்டு பண்ண நான் விரும்புவதாலுமே இக்கடிதம் உங்களுக்கு எழுதலானேன்."

காந்திஜி 1918-ஆம் வருஷத்தில் இம்மாதிரி இராஜப் பிரதிநிதிக்குக் கடிதம் எழுதினார். அந்த நாளில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விட்டு இந்தியா வெளியில் போகக் கூடும் என்ற எண்ணமே யாருக்கும் உண்டானதில்லை. 'சுதந்திரம்' என்ற வார்த்தையைக் கூட யாரும் உபயோகிப்பதில்லை. 'சுயாட்சி' என்றுதான் எல்லாரும் சொல்லி வந்தார்கள். முப்பது வருஷத்துக்குள் நிலைமை எப்படி மாறிவிட்டது என்பதை நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இல்லையா?

இராஜப் பிரதிநிதிக்குக் கடிதம் எழுதி அனுப்பிவிட்டு மகாத்மா உடனே நதியாத் நகரத்துக்குச் சென்றார். வரிகொடா இயக்கத்தை நடத்திய ஜில்லாவிலேயே சைன்யத்துக்கு ஆள் சேர்க்கும் வேலையை ஆரம்பிக்க வேண்டும் என்று கருதினார். ஸ்ரீ வல்லபாய் படேல் முதலிய சகாக்களுடன்கலந்தாலோசித்தார். அவர்கள் இந்தக் காரியத்தில் அவ்வளவு உற்சாகம் காட்டவில்லை. முயற்சி செய்தாலும் பலன் கிட்டாது என்று சொன்னார்கள். பொது ஜனங்கள் சர்க்காரிடம் கொண்டிருக்கும் விரோதபாவத்தை அவ்வளவு சீக்கிரத்தில் மாற்றிவிட முடியாது என்று கூறினார்கள்.

ஆயினும் காந்திஜியின் கட்டளையை மதித்து வேலை செய்வதற்கு முன்வந்தார்கள். அவர்கள் முன்வந்தால் மட்டும் போதுமா? பொது ஜனங்களுடைய ஒத்துழைப்பு கிட்டவில்லை. வரிகொடா இயக்கத்தின் போது போட்டி போட்டுக்கொண்டு உதவி செய்ய முன்வந்தவர்கள் இப்போது ஒதுங்கி ஒதுங்கிப் போனார்கள். தலைவர்கள் ஊர் ஊராய்ப் போவதற்கு அப்போது வாடகையில்லாமல் வண்டிகள் கிடைத்தன. இப்போது வாடகை கொடுத்தாலும் வண்டி கிடைக்கவில்லை! ஆகவே தினம் இருபது மைல் வரையில் மகாத்மா காந்திஜியும் அவருடைய துணைவர்களும் நடந்து சென்று பிரசாரம் செய்ய வேண்டியிருந்தது. ஜனங்கள் சாப்பாடு போடுவதிலும் உற்சாகம் காட்டவில்லை. ஆகையால் அவர்கள் கையோடு சாப்பாடு கொண்டுபோக வேண்டியிருந்தது.

இப்படியெல்லாம் எதிர்ப்பு இருக்கும் என்று மகாத்மா எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அதைக் கண்டு மனந்தளர்ந்து விடவும் இல்லை. கடமை என்று ஏற்றுக்கொண்ட காரியத்தை எத்தனை இடையூறு வந்தாலும் எதிர்த்துச் சமாளித்து நடத்துவது காந்திஜியின் தர்மமல்லவா?

கிராமங்களில் பொதுக்கூட்டம் கூட்டினால் முன்போல் ஏராளமாக ஜனங்கள் வருவதில்லை. சிலர்தான் வந்தார்கள். அவர்களும் குறுக்குக் கேள்விகள் கேட்டார்கள். "நீங்கள் அஹிம்சை உபாசகர் ஆயிற்றே? சைன்யத்துக்கு எப்படி ஆள் சேர்க்கலாம்?" என்றார்கள். "அரசாங்கம் எங்களுக்கு என்ன உதவி செய்தது? நாங்கள் எதற்கு இப்போது ஒத்துழைக்க வேண்டும்?" என்றார்கள்.

ஆயினும் மகாத்மாவின் பிடிவாதமான வேலை பலன்தராமற் போகவில்லை. நாளடைவில் ஜனங்கள் சைன்யத்தில் சேருவதற்குத் தங்கள் பெயர்களைக் கொடுக்க முன் வந்தார்கள்.

இடைவிடாமல் ஆள் திரட்டும் வேலை செய்து வந்ததின் காரணமாக மகாத்மாவின் உடல் நிலை பாதகம் அடைந்தது. ஒருநாள் வயிற்றுக் கடுப்பு நோய் வந்துவிட்டது. அன்றைக்குச் சபர்மதி ஆசிரமத்திலிருந்து நதியாத்துக்குப் போகத் திட்டம் போட்டிருந்தார். ஆசிரமத்திலிருந்து ஒன்றேகால் மைல் தூரத்திலிருந்த ஸ்டேஷனுக்கு நடந்தே சென்றார். ஆமதாபாத் ஸ்டேஷனில் அவருடன் சேர்ந்து கொண்ட ஸ்ரீ வல்லபாய் படேல் காந்திஜிக்கு உடம்பு சுகமில்லை என்பதைக் கண்டு கொண்டார். திரும்பிவிடலாம் என்று அவர் சொன்னதை மகாத்மா கேட்கவில்லை. இரவு பத்து மணிக்கு இருவரும் நதியாத் ஸ்டே ஷனில் இறங்கி அநாதாசிரமம் சென்றார்கள். அங்கே மகாத்மாவுக்கு வயிற்றுப் போக்கு நோய் மிகக் கடுமையாகிவிட்டது. நண்பர்கள் கவலைப்பட்டு வைத்தியர்களை அழைத்து வந்தார்கள். மகாத்மா வைத்தியம் செய்து கொன்னவும் மருந்து சாப்பிடவும் மறுத்துவிட்டார். ஊசி குத்திக் கொள்ளவும் இணங்கவில்லை. பட்டினி கிடந்தால் சரியாய்ப் போய்விடும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார். இருபத்து நாலு மணி நேரம் பட்டினி கிடந்த பிறகு பசியே இல்லாமல் போய்விட்டது. பலவீனம் முற்றிவிட்டது. வயிற்றுப் போக்குடன் சுரம், பிதற்றல் எல்லாம் சேர்ந்துவிட்டது. மகாத்மா தம்முடைய மரணம் சமீபித்துவிட்டது என்று நம்பினார். அம்பலால் சாராபாய் முதலிய நண்பர்கள் ஆமதாபாத்திலிருந்து அவரைப் பார்க்க வந்தார்கள். தம்மை ஆசிரமத்தில் கொண்டு போய் விட்டுவிடும்படி அவர்களிடம் கேட்டுக்கொண்டார். அவர்கள் அவ்வாறே செய்தார்கள்.

சபர்மதி ஆசிரமத்தில் காந்திஜி யமனோடு போராடிக் கொண்டிருந்த சமயத்தில் யுத்தம் முடிந்து விட்டது என்றும் இனிமேல் ஆள்திரட்ட வேண்டியதில்லை யென்றும் கமிஷனர் செய்தி அனுப்பினார். அந்தச் செய்தியை ஸ்ரீ வல்லபாய் படேல் மகாத்மாவிடம் வந்து கூறினார். மகாத்மாவின் மனதிலிருந்து ஒரு பாரம் இறங்கியது. உடல் நிலை மோசமானதினால் ஏற்றுக் கொண்ட கடமையைச் செய்யமுடியவில்லையே என்ற கவலை மகாத்மாவின் மனதில் இருந்தது. அந்தக் கவலை இப்போது நீங்கிற்று. அது முதல் மகாத்மாவின் உடம்பும் குணமடையத் தொடங்கியது. ஜல சிகிச்சை, பனிக்கட்டி சிகிச்சை முதலிய இயற்கை வைத்திய முறைகளைக் கடைப்பிடித்து வந்தார். நோய் நீங்கிய பிறகும் உடம்பில் பழைய பலம் வர நெடுநாள் ஆயிற்று.

-----------------------------------------------------------
( தொடரும்)

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

கருத்துகள் இல்லை: